யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீனாவில் உள்ள இரயில் நிலையத்தை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் என்று தவறாக பரப்புகிறார்கள். சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரத்தில் உள்ள இரயில் நிலையம் இது. இதுதான் உலகிலே மிகப் பெரிய இரயில் நிலையம் என்று சொல்லப்படுகிறது.
பரவிய செய்தி
இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி
இந்தியா பூராவும் இவரை போன்ற ஸ்வாமிகளின் காலடியில் கிடத்தினால், ராஜ்ய பரிபாலனம் மிளிர, சனாதனம் செழிக்க வாழலாம்.

விரிவான விளக்கம்
உத்திரப்பிரதேசத்தில் உள்ள பேருந்து நிலையம் என்றுக் கூறி 13 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தான் கட்டமைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி
இந்தியா பூராவும் இவரை போன்ற ஸ்வாமிகளின் காலடியில் கிடத்தினால், ராஜ்ய பரிபாலனம் மிளிர, சனாதனம் செழிக்க வாழலாம். pic.twitter.com/SMpW15unrD
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். Comment with Lucia என்ற யூடியூப் பக்கத்தில், ஜூலை 21, 2025 அன்று “The world’s largest high-speed train station is in China. Chongqing East Railway Station” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, Barrett என்ற யூடியூப் பக்கத்தில் “The BIGGEST Train Station in the World here in China“ என்ற தலைப்பில் இதே வீடியோ பதிவாகியிருந்தது. அதில் பேசும் ஒரு நபர் இது ரயில் நிலையம் என்றும், இதன் கட்டுமான பணி 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கி, ஜூன் 27, 2025 அன்று முடிவடைந்ததாக கூறுகிறார். மேலும் இதுதான் உலகிலே மிகப் பெரிய இரயில் நிலையம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பரவி வரும் வீடியோ சீனாவில் உள்ள ரயில் நிலையம் என்பது உறுதியானது.
இதை மேலும் உறுதி செய்ய Chongqing East Railway Station என்று கூகுளில் தேடிய போது, பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது.

முடிவு:
எனவே, இது சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரத்தில் உள்ள இரயில் நிலையமாகும். இதை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் என்று தவறாக பரப்புகிறார்கள்.