போர் பதற்றமும் பொய் செய்திகளும்! Fact checkன் முக்கியத்துவம்!
அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகள் முதல் ஊடகங்கள் வரை தவறான செய்திகளை பரப்பிவரும் நிலையில், இதனையெல்லாம் பகுப்பாய்வு செய்து சரி பார்த்து மக்களுக்கு உண்மையான செய்தியையும் தகவல் கொடுப்பது மிக சவாலானது.
”போரின் முதல் பலி உண்மை (The first casualty of War is Truth)” என்பது நூறு ஆண்டுகள் பழைமையான வாசகமாகும். இந்த வாசகம் உண்மையானது என ஒவ்வொரு முறையும் போர் நடக்கும் போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையிலான தற்போதைய ஆயுத மோதலின் போதும் விதிவிலக்காக இருக்கவில்லை.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 7ஆம் தேதியன்று ‘Operation Sindoor’ என்று பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஒன்றன் மீது ஒன்று தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. பாகிஸ்தான் காஷ்மீரையும் பஞ்சாப் மாநிலத்தின் ’அமிர்தசரஸ்’ நகரத்தையும் தாக்கியதாகவும், பாகிஸ்தானின் இராணுவ ட்ரோன்களை இந்திய இராணும் சுட்டு வீழ்த்தியதாகவும் அண்மைச் செய்திகள் தெரிவிக்கவின்றன.

அருகில் இருக்கும் இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான இந்த ஆயுத மோதல் குறித்து உலக நாடுகள் தங்களது கவலையை தெரிவித்திருக்கின்றன. இரு நாடுகளும் இராணுவ கட்டுப்பாட்டை (Military Restraint) மேற்கொள்ளும் படியும் பதற்றத்தை குறைக்க (De Escalation) நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மக்களுக்கு சரியான, உண்மையான செய்திகள் கொடுக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு ஊடகங்களின் தோளில் இருக்கிறது. ஆனால், அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகளை போல ஊடகங்களும் தவறான செய்திகளை வெளியிட்டு வருவது இந்த நிலையை இன்னும் மோசமாக்கவே செய்யும்.
இந்தியா ’Operation Sindoor’ அறிவித்த நிலையிலிருந்து, தொடர்ந்து பழைய வீடியோக்கள், புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ’Deep Fake’ வீடியோகள் ஆகியவற்றை தற்போது நடைபெற்றுவரும் மோதல் தொடர்பானது என சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ’தந்தி டிவி’, ’புதிய தலைமுறை’, ‘ABP Nadu’, ’News 18 தமிழ்நாடு’ போன்ற தமிழ் செய்தி ஊடகங்கள் ‘இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்’, ’பாலஸ்தீன் மீதான இன அழிப்புப் போரின் போது இஸ்ரேல் காஸாவை தாக்கியது’ போன்ற பழைய வீடியோகளை கொண்டு தற்போதைய ’இந்தியா - பாகிஸ்தான் மோதல்’ குறித்த செய்திகளை வெளியிட்டன.
மேலும், Gaming Video-களையும், தற்போதைய ஆயுத மோதலுக்கு தொடர்பில்லாத பழைய வீடியோகளையும் கொண்டு இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

‘India Today’ செய்தி ஊடகம் இந்திய கப்பல்படை கராச்சி துறைமுகத்தை தாக்கிய செய்தி வெளியிடுகிறது. ஆனால், கராச்சி துறைமுகத்தை இந்திய கப்பல்படை தாக்கியதாக இந்திய பாதுகாப்பு படைகள் சார்பில் எந்த அதிகாரப்பூர்வமான செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
’கராச்சி துறைமுக நிர்வாகம் (Karachi Port Trust Official)’ அதன் ’எகஸ்’ கணக்கு Hack செய்யப்பட்டு அதிலிருந்து பொய் செய்தி பரப்பப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், கராச்சி துறைமுகம் எவ்வித சேதமும் அடையவில்லை, வழக்கம் போல் சரக்கு போக்குவரத்தை கையாள்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.
அதேபோல், இந்தியாவின் இராணுவத் தளங்கள் விமானப்படை தளங்கள் ஆகியவற்றை தாக்கியதாகவும், இந்திய இராணுவ வீரர்கள் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், இந்தியா அனுப்பிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து பொய் செய்திகள் பரப்பப்படுகிறது.

இவ்வாறு அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகள் முதல் ஊடகங்கள் வரை தவறான செய்திகளை பரப்பிவரும் நிலையில், இதனையெல்லாம் பகுப்பாய்வு செய்து சரி பார்த்து மக்களுக்கு உண்மையான செய்தியையும் தகவல் கொடுப்பது மிக சவாலானது.
இருப்பினும், நடந்த இரண்டு நாட்களாக பரப்பப்பட்டு வரும் பொய் செய்திகளை சோதித்து உண்மையை கண்டறிந்து சொல்வதில் இந்தியா முழுவதும் உள்ள Fact Checking நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் ’You Turn’ நிறுவனமும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பதாக ’Aaj Tak’ செய்தி ஊடகம் அங்கீகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான ஆயுத மோதல் போன்ற இக்கட்டான சூழலில் பொய் செய்திகளை பரப்புவது என்பது சமூகத்தில் பல்வேறு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால், உங்களுக்கு வரும் தகவல்களை சோதித்தறிந்து பரப்புங்கள். பொய் செய்திகளை, தவறான தகவல்களை பரப்பும் வலைபின்னலில் ஒருவராக நாம் இல்லாமல் இருப்போம். சரியான உண்மையான தகவல்கள் மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவோம்.
Beware of Fake News! Help us break the Misinformation Chain!