YouTurn

காவல்துறைக்கு உச்சபட்ச அதிகாரமளிக்கிறதா புதிய குற்றவியல் சட்டங்கள் ? - ஓர் பார்வை !

காவல்துறைக்கு உச்சபட்ச அதிகாரமளிக்கிறதா புதிய குற்றவியல் சட்டங்கள் ? - ஓர் பார்வை !
குரல் வாக்கெடுப்பு மூலம், காலனித்துவ காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நீதி சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கில், புதிய சட்டங்களுக்கான மூன்று மசோதாக்களுக்கு மக்களவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இதுவரை நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), 1860; குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973; மற்றும் இந்திய ஆதாரச் சட்டம், 1872 ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (ஐபிசி) பதிலாக புதிதாக, பாரதிய நியாய (இரண்டாவது) சன்ஹிதா, 2023 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) மாற்றாக பாரதிய நாகரிக் (இரண்டாவது) சுரக்ஷா சன்ஹிதா, 2023ம், இந்திய ஆதாரச் சட்டத்திற்கு மாற்றாக பாரதீய சாக்ஷ்யா (இரண்டாவது) 2023ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இதுவரை 158 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது உள்ள சட்டங்கள் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டதால், புதிதாக கொண்டு வரப்படும் சட்டங்கள் ஒரு முழு இந்திய சட்டமாக இருக்கும் என்றும், பழைய சட்டங்கள் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளவை பொது மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு முன்னர் மசோதா அறிமுகப்படுத்தும் போதே பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 140-க்கும் அதிகமான எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இல்லாமலே இந்த மூன்று புதிய சட்டங்களை ஒன்றிய அரசு 'குரல் வாக்கெடுப்பு' மூலம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய நியாயா (இரண்டாம்) சன்ஹிதா, 2023 (BNS II):

பயங்கரவாதத் தாக்குதல்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், அலட்சியத்தால் ஏற்படும் இறப்பு, கும்பல் படுகொலை மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்களுக்காக BNS II-ல் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆயுள் தண்டனையை வரையறுக்கும் சொற்றொடர்களான "வாழ்நாள் சிறை, அதாவது ஒரு நபரின் வாழ்வின் எஞ்சிய காலங்கள் வரையிலான சிறை" என்பது இதற்கு முந்தைய BNS சட்டங்களின் கீழ் வரையறுக்கப்பட்டிருந்தது. எனவே BNS II - விலும் இதே சொற்றொடர்களே பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகள்:

"பொதுமக்களை மிரட்டுவது அல்லது பொது ஒழுங்கை சீர்குலைப்பது" போன்ற வார்த்தைகள் BNS II ஆல் அகற்றப்பட்டுள்ளன. மற்றும் "நாட்டின் அரசியல், பொருளாதாரம் அல்லது சமூகக் கட்டமைப்புகளை சீர்குலைக்கும் அல்லது அழிக்கும் செயல்கள் அல்லது பொது அவசரநிலையை உருவாக்குதல் அல்லது பொதுப் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்கள்" போன்ற வரிகளும், பயங்கரவாத நடவடிக்கைகள் பகுதிகளில் கூடுதலாக நீக்கப்பட்டுள்ளன.

மேலும் BNS II உருவாக்கியுள்ள பயங்கரவாத சட்டங்களில், எந்தவொரு பொது அதிகாரிக்கு எதிராகவும் குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்; போலியான இந்தியப் பணம், நாணயங்கள் அல்லது பிற பொருட்களை உற்பத்தி செய்தல், கடத்துதல் அல்லது புழக்கத்தில் விடுதல்; அல்லது "முக்கியமான உள்கட்டமைப்பை" சேதப்படுத்த அல்லது அழித்தல் அல்லது நாட்டின் நிலையான பணமதிப்பைக் குறைக்கும் வண்ணம் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்தல் போன்றவையும் குற்றங்களே எனப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதக் குழுவின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் பழைய சட்டங்களில் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டன. ஆனால் BNS II இன் கீழ் பயங்கரவாதக் குழுவின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள், "தெரிந்தே" உருவாக்கப்பட்திருந்தாலோ அல்லது தெரிந்தே வாங்கியிருந்தால் மட்டுமே சட்டவிரோதமானது என கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதே போன்று "தெரிந்தோ" அல்லது "தன்னிச்சையாகவோ" மட்டும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது மறைத்து வைப்பது மட்டுமே சட்டவிரோதமானது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட நோக்கத்துடன் கூட்டாக செய்யப்படும் குற்றங்கள் (Criminal collusion with a shared objective) :

BNS இன் பிரிவு 111 இல் குறிப்பிடப்பட்டுள்ள சதி குற்றத்தோடு சேர்த்து, கூடுதலாக, BNS இன் பிரிவு 61 இன் கீழ் செய்யப்படும் கிரிமினல் சதிகளுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரிவு (Article 61) BNS II ஆல் "பொது நோக்கத்துடன்" நடத்தப்பட்ட சதி என்று குறிப்பிட்டு திருத்தப்பட்டுள்ளது.

கும்பல் கொலைகளுக்கு மிகக் கடுமையான தண்டனை

கும்பலாக கொலை செய்வது என்பது கொலையின் ஒரு துணைப்பிரிவாகும், அதற்காக BNS தண்டனையை நிறுவியது. அந்த தண்டனையில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏழு வருட குறைந்தபட்ச தண்டனை BNS II ஆல் நீக்கப்பட்டு ஜாதி, மொழி அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகள் உட்பட எந்த காரணத்திற்காகவும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கொல்வது கடுமையான குற்றமாக கருதப்படும் என்றும், அது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் அபராதத்துடன் விதிக்கப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தையும் குற்றமாக சேர்த்தல் (The addition of organized crime as a crime) :

கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சைபர் கிரைம் போன்ற குற்றவியல் அமைப்பின் சார்பாக மேற்கொள்ளப்படும் குற்றங்களோடு சேர்த்து, சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் ஒரு சட்டவிரோத செயல் என்று கூறி இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது, ​​தேசத்துரோக பேச்சு, சட்டவிரோத செயல் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. மாறாக, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதிக்கும் செயல்கள் இப்போது புதிய குற்றவியல் சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

சமுதாய ஈடுபாடு (Community involvement) :

"சமூக சேவை" என்ற பிரிவு திருத்தப்பட்ட மசோதாக்களில் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முந்தைய வரைவில் சமூக சேவை என்பது தண்டனையின் ஒரு வடிவமாக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், சமூக சேவை என்றால் என்ன, எந்த குற்றங்களுக்கு சமூக சேவை செய்யுமாறு சொல்ல வேண்டும் என்பது பற்றிய விளக்கம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் திருத்தப்பட்ட நடவடிக்கையின்படி, சமூக சேவை என்பது நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட சமூகத்திற்கு நன்மை பயக்கும் எந்தவொரு உழைப்பு நடவடிக்கையும், சமூகத்திற்கு சேவை ஆற்றுவதே ஆகும் என்றும், இது குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனையாக இருக்கும் என்றும், அதற்காக குற்றவாளிக்கு எந்த ஊதியமும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாம்) சன்ஹிதா (BNSS II) :

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் படி இந்த புதிய சட்டத்தின் மூலம், சில வழக்குகளில் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்வதற்கு முன்பு, ஜீரோ-எஃப்ஐஆர் மற்றும் எலக்ட்ரானிக் எஃப்ஐஆர் செய்து கொள்ள முடியும் என்று புதிய சட்டங்களில் கூறப்பட்டுள்ளது.

அதன் படி, புலனாய்வுக் குற்றத்தைப் பற்றிய தகவல் கிடைத்தாலே, அதன் பிராந்திய அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பிராந்திய அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் முதல் தகவலைப் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் ஜீரோ-எஃப்ஐஆர்களைப் பதிவுசெய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்கள் காத்திருக்காமலே பெண்கள் BNSS II, பிரிவு 173-ன் படி ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்து, தங்களுக்கு எதிரான குற்றங்களை காவல் நிலையத்தில் தெரியப்படுத்த முடியும்.



ஜீரோ எஃப்ஐஆர் என்பது இந்திய குற்றவியல் சட்ட அமைப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருத்து அல்ல, இது 2015 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆலோசனையிலே பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய திருத்தம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் நிவாரணமாக வந்துள்ளது. இது, முக்கியமான வழக்குகளை பதிவு செய்ய அவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, எஃப்ஐஆர் பதிவு செய்யும் போது அவர்கள் மீண்டும் சோதனை செய்யாமல் இருக்கவும் உதவுகிறது.

பாரதிய சாக்ஷ்யா (Bharatiya Sakshya(second) Bill):

ஒப்புதல் வாக்குமூலங்கள், உண்மைகளின் பொருத்தம் மற்றும் ஆதாரத்தின் சுமை போன்ற பெரும்பாலான IEA (The Indian Evidence Act, 1872) விதிகளையும் இந்த சட்டம் அப்படியே வைத்திருக்கின்றது. இருப்பினும், இது கீழே உள்ள சில முக்கியமான மாற்றங்களையும் கொண்டுள்ளது:

ஆவணச் சான்றுகள்: BSB II ஆனது பாரம்பரிய எழுத்துக்கள், வரைபடங்கள் மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கொண்ட மின்னணுப் பதிவுளையும் ஆவணங்களின் வரையறையில் சேர்த்து விரிவுபடுத்துகிறது.

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சான்றுகள்: அசல் ஆவணங்கள், கணினிமயமாக்கப்பட்ட தரவு மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும் முதன்மை ஆதாரமாகவே இருக்கும். வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் செய்யப்பட்ட ஒப்புதல்கள், அத்துடன் பதிவுகளை மறுபரிசீலனை செய்த பயிற்சி பெற்ற சாட்சியின் சாட்சியங்கள் ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றாகக் கருதப்படும்.

வாய்வழி சான்றுகள்: BSB II வாய்வழி ஆதாரங்களை மின்னணு முறையில் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது, அதாவது பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சிகள் அனைவரும் மின்னணு முறையில் சாட்சியமளிக்க முடியும்.

மின்னணு பதிவுகளின் அனுமதி: டிஜிட்டல் அல்லது மின்னணு ஆவணங்கள் காகித ஆவணங்களைப் போலவே சட்டப்பூர்வ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. அதன்படி இது semiconductor memory, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், மின்னஞ்சல்கள், Server logs, இருப்பிடச் சான்றுகள் மற்றும் குரல் அஞ்சல்களில் சேமிக்கப்பட்ட தகவல்கள் (voicemails) ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

கூட்டு விசாரணைகளுக்கான திருத்தப்பட்ட நியாயம் (Revised Justification for Joint Trials): கூட்டு விசாரணைகளில் இப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பினர் இல்லாத போதும் அல்லது கைது உத்தரவுக்கு பதிலளிக்காத சூழ்நிலைகளிலும் கூட விவாதங்கள் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சிக்கல்களும் விமர்சனங்களும்:

  • முன்பு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 15 நாட்கள் வரை மட்டுமே நீதிமன்றக் காவலில் வைக்க முடியும். ஆனால் இப்போது 60 அல்லது 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கமுடியும். இதன் மூலம் காவல்துறையினருக்கு ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களை விட அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு விட்டதோ என்ற கவலை எழுகிறது.

  • பழைய சட்டங்களில் அரசு சாரா அமைப்புகள் அல்லது சிவில் சமூக அமைப்பினரும், மரண தண்டனை குற்றவாளிகளின் சார்பாக கருணை மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கருணை மனுக்கள் மரண தண்டனை கைதிகளால் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.

  • தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வது குற்றமாக்கப்பட்டுள்ளது என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

  • திருத்தப்பட்ட மூன்று புதிய சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு, இடைநீக்கம் செய்யப்பட 140 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கருத்தையும் அரசு கேட்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் ஒரு எதிர்பார்ப்பாகவே உள்ளது. எனவே புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மீண்டும் விவாதம் நடைபெற வேண்டியதும் அவசியமான ஒன்றாகும் !


ஆதாரங்கள்:

https://www.livelaw.in/amp/top-stories/parliament-criminal-law-bills-indian-penal-code-crpc-evidence-act-bns-bnss-bss-245122

https://www.thehindu.com/news/national/parliament-proceedings-lok-sabha-passes-three-criminal-law-bills/article67658633.ece

https://pib.gov.in/PressReleseDetail.aspx?
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை