யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வயநாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக பரப்பப்படும் படங்கள் 2018 வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டவை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 பேர் இறந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியும் உதவும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் RSS அமைப்பினர் ஈடுபட்டு இருப்பதாக 4 புகைப்படங்கள் பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் RSS அமைப்பினர் சமூக பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 🚩#Kerala #Landslide #Wayanad #WayanadLandslides pic.twitter.com/0LBHzxMlbO
— Kaniyampoondi Senthil (@Senthil_TNBJP) July 31, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இவை எதுவும் தற்போது உதவி செய்யும் போது எடுத்தவை இல்லை என்பதை அறிய முடிந்தது.
கையில் உணவு பார்சலுடனும் வீடுகளை சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் புகைப்படம், ஆகஸ்ட் 2018ம் ஆண்டு ’RSS Rengali, Sambalpuர்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதே படங்கள் ’Quora’ தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக மக்கள் பலர் சூழ்ந்துள்ள இடத்தில் வெள்ளை சட்டை, காக்கி டவுசர் அணிந்த ஒருவரின் புகைப்படம், ’விஸ்வ ஸம்வாத் கேந்திரம்’ என்ற தளத்தில் ’KeralaFloods 2018 Relief activities’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மரங்கள் அடர்ந்துள்ள பகுதியில் மக்கள் இருப்பது போன்ற படம், 2019ல் பேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களிலிருந்து பரவக் கூடிய படங்கள் எதுவும் தற்போதைய வயநாட்டு நிலச்சரிவு மீட்புப் பணியுடன் தொடர்புடையவை அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
வயநாடு நிலச்சரிவுடன் தொடர்புப்படுத்திப் பல பொய் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அவை குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடிய நாய் எனப் பரவும் பழைய வீடியோ!
மேலும் படிக்க: வயநாடு நிலச்சரிவு சிசிடிவி காட்சி எனப் பரவும் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ!
முடிவு:
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உதவி செய்வதாகப் பரவும் புகைப்படங்கள் 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது உதவிய படங்கள். அவை தற்போது நடந்தது எனத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
