யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.
பரவிய செய்தி
’Jio தொலைத்தொடர் சேவை நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தினால், தமிழ்நாடு முழுவதும் Jio நிறுவனத்தின் சேவையை தடை செய்வேன்’ என்று முதல்வர் விஜய் முகேஷ் அம்பானிக்கு சவால் விட்டுள்ளார்.


விரிவான விளக்கம்
இந்தியா முழுவதும் ஏர்டெல், ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் தனியார் தொலைத்தொடர்பு துறையில் வலுவானதாக இருக்கிறது. இவ்வாறு தொலைதொடர்பு சந்தை போட்டியின்றி இருப்பதால் இந்த நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்துவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இந்தப் பின்னணியில், ‘முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தினால், தமிழ்நாடு முழுவதும் Jio நிறுவனத்தின் சேவையை தடை செய்வேன்’ என்று முதல்வர் விஜய் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முதலில், ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, ’தொலைத்தொடர்பு சட்டம் 2023’ நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அச்சட்டத்தின் படி, ’இந்தியாவில் ஒரு நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை வழங்க உரிமம் அளிப்பது, நிறுவனங்கள் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை அமைப்பது, இயக்குவது, பராமரிப்பது, அதனை விரிவுபடுத்துவது ஆகியவற்றுகான உரிமம் அளிப்பது எல்லாம் ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் தான் இருக்கும்’ என்பது தான் விதி. இந்த சட்டத்திற்கு முந்தைய சட்டத்தின் படியும், அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும் தொலைத்தொடர்வு என்பது ஒன்றிய அரசின் கீழ் தான் இயங்கி வருகிறது. அதில் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை.

மேலும், TRAI என்று சொல்லப்படக்கூடிய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நேரடியாக தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை தீர்மானிக்காது என்றாலும், தனியார் நிறுவனங்கள் இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் கட்டணத்தை நிர்ணயிக்கவும், உயர்த்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை முடக்குவது, தடை செய்வது இவையெல்லாம் மாநில அரசின் வரம்பிற்குள்ளே வாரது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
ஜியோ (Jio) நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தினால், தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் சேவையை தடை செய்வேன் என்று முதல்வர் விஜய் சொன்னதாக பொய்யான சமூக வலைத்தளங்களில் செய்தியை பரப்பி வருகிறார்கள்.