யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.
பரவிய செய்தி
நீட் தேர்வுக்கு எதிராக தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து போராட முயற்சித்த பாடகர் தெருக்குரல் அறிவை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, தெருக்குரல் அறிவை அழைத்து வர உத்தரவிட்டு முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்தார்.


விரிவான விளக்கம்
கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவை காரணமாக காட்டி ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடந்தப்பட்டது. இந்த வினாத்தாள் கசிவு, மறுதேர்வு காரணமாக மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கடுமையாக போராடி வருகிறார்கள். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறை, துணை இராணுவப்படையினர் கடுமையாக தாக்கினர்.
இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்துவருகிறது. அந்த வகையில், பாடகர் தெருக்குரல் தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக போராட முயற்சித்தார். காவல்துறை அவரை பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்றது. ஆனால் காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்ட சற்று நேரத்திலே தெருக்குரல் அறிவை வரவழைத்து முதல்வர் விஜய் சந்தித்ததாக ’பாலிமர்’, ’News தமிழ்’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மை என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக தேடியபோது ’தெருக்குரல் அறிவு’ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவைக் காணமுடிந்தது.
அதில், ‘டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையை உடனே நிறுத்தவும், அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றும் கோரி ஜூலை 21ஆம் தேதி தலைமை செயலகம் முன்பு குரல் கொடுத்தேன். நீட் காரணமாக நாம் ஏற்கனவே பல இளம் உயிர்களை இழந்துவிட்டோம். நீட் தேர்வை மொத்தமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஜூலை 21 அன்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தேன். போராடும் மாணவர்கள் மீது வன்முறையை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று வலியுறுத்தினேன். நான் முதல்வரை சந்திக்கவில்லை. நான் முதல்வரை சந்தித்ததாக ஊடக செய்திகள் சொல்லும் நிலையில் இதை நான் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்’ என்று தெருக்குரல் அறிவு குறிப்பிட்டுள்ளார்.
இதில் ‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை’ என்று தெருக்குரல் அறிவு தெளிவாக குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம்.
முடிவு:
நீட் தேர்வை ரத்துக் கோரி செய்ய தலைமைச் செயலகம் முன்பு போராட முயற்சித்த பாடகர் தெருக்குரல் அறிவை அழைத்து வர உத்தரவிட்டு முதல்வர் விஜய் அவரை சந்தித்ததாக ’பாலிமர்’, ’News தமிழ்’ உள்ளிட்ட ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.