யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
தொடர்ச்சியாக போட்டித் தேர்வுகளில் நடந்துவரும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார்.

WhatsApp Forward
விரிவான விளக்கம்
இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஒருங்கிணைத்த போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் கடந்த மூன்று வாரங்களாகப் போராடி வந்தார்கள். இதனை தொடர்ச்சியாக ஜூலை 20ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பேரணி செல்ல முயற்சித்த போது அவர்கள் மீது டெல்லி போலீஸார் மற்றும் துணை இராணுவப்படைகள் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக போட்டித் தேர்வுகளில் நடந்த வினாத்தாள் கசிவு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
இது குறித்து தேடியபோது, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது ஊடக செய்திகளையோ காணக்கிடைக்கவில்லை.

மேலும், ஒன்றிய கல்வி அமைச்சகம் ஜூலை 22ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிகிறது. அதன்படி, ‘ஜூலை 22ஆம் தேதியன்று மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்று டெல்லியில் நடந்தது. ஒன்றிய அரசு சார்பில் செய்லபடுத்தப்படும் பள்ளிக்கல்வி குறித்த திட்டங்களை பற்றி ஆய்வு செய்யும் வகையில் கூட்டப்பட்ட இந்த இரண்டு நாள் மாநாட்டில் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பேசியதாக’ தெரியவருகிறது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்துவரும் நிலையில், ஜூலை 23ஆம் தேதி இரவு பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையிலும், இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையிலும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது குறித்து வீடியோவில் பிரதமர் மோடி ஏதும் குறிப்பிடவில்லை.
இதிலிருந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக பரப்பப்படும் கடிதம் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.
முடிவு:
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியான கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.