யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கவுகாத்தி உயர் நீதிமன்ற கிளையின் கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருகை வந்தபோது எழுப்பப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
தலைமை தேர்தல் கமிஷனருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது. தனி விமானத்தில பாஜக மந்திரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர்.பாஜக மந்திரிகள் வேறு. தேர்தல் கமிஷனர் வேறு அல்ல. ராகுல் காந்தியை மிரட்டும் தைரியம் இங்கிருந்துதான் பிறக்கிறது.
விரிவான விளக்கம்
'இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாக' கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதனை 'வாக்கு திருட்டு (Vote Chori)' என்ற பிரச்சார இயக்கமாகவும் முன்னெடுத்து வருகிறார் ராகுல் காந்தி.
இந்நிலையில், சிறிய ரக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட சில நபர்களை கீழே உள்ளவர்கள் சிலர் வரவேற்று அழைத்துச் செல்லும் வீடியோவை பதிவிட்டு, "தனி விமானத்தில் பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் பயணம் செய்கிறார்" என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு-வின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில், இந்த வீடியைவைக் காணமுடிந்தது. இந்த வீடியோவை பகிர்ந்து அதில் சிறு குறிப்பு எழுதியிருந்தார்.
Honble Chief Justice of India Justice BR Gavai along with Hon'ble Judges of SC & Union Minister Law & Justice Shri @arjunrammeghwal ji arrived at Itanagar in Arunachal Pradesh to a warm reception. The new building of Guwahati High Court Itanagar Bench will be inaugurated by CJI. pic.twitter.com/j9CYpxMj2k
அதில், 'அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் இட்டாநகரில் கட்டப்பட்டுள்ள கவுகாத்தி உயர் நீதிமன்ற கிளையின் கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் வருகை தந்ததாக' குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேடுகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பரப்பப்படும் இந்த வீடியோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தனி விமானத்தில் பயணித்ததாக சொல்லப்படுவது தவறான தகவல் என்பது தெளிவாகிறது.
முடிவு:
அருணாச்சல பிரதேசத்தில் உயர்நீதிமன்ற கிளையின் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வருகை தந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தனி விமானத்தில் பயணம் செய்வதாக தவறான பரப்பப்படுகிறது.