யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிப்ரவரி 01, 2026 அன்று முதல்வர் ஸ்டாலின் "ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பரவிய செய்தி
16 th finance commission ல மாநிலங்கள் கேட்ட 50 சதவீதம் தராம 41 சதவீதம்தான் தருவோம்னு சொன்னாங்களே அதை முதல்வர் ஏன் கேட்கலனு விலாவாரியா கேட்டான் பாருங்க அருமை அருமை.
அடேய் இனி விஜய் கட்சியில உள்ளவங்களை கூப்பிட்டா நீங்கதான் நல்ல படிச்சுட்டு வரனும்.
விரிவான விளக்கம்
”நிறைவு பெற்ற 2 ஆண்டுகள்! நிறைவேறுமா விஜயின் கனவு?” என்ற தலைப்பில் The Debate யூடியூப் சேனலில் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தவெகவை சேர்ந்த ஆனந்த் அஜித், ஃபிலெக்ஸ் ஜெரால்ட், விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாதகவை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சபீர் அகமது, செந்தில் வேல் உள்ளிட்டோர் பங்கேற்றுருந்தனர்.
அதில் பேசிய தவெக செய்தி தொடர்பாளர் ஆனந்த் அஜித், ஒன்றிய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்று கூறியிருந்தார்.
என்னடா இது எந்த பால போட்டாலும் six அடிக்கிறான்
நெறியாளர் நினைச்சுருப்பார் பட்ஜட்டை பற்றி விஜய் ஏன் டிவிட்டர் போடலனு கேட்டா மாட்டிக்குவான்னு கேட்டார்.
ஆனால் நெறியாளரும் மாட்டி முதல்வரையும் மாட்டிவிட்டார் பாருங்க
16 th finance commission ல மாநிலங்கள் கேட்ட 50 சதவீதம் தராம 41… pic.twitter.com/PRecPGtfuF
உண்மை என்ன?
இது குறித்து முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளாரா என்பதை தேடினோம். அப்போது பிப்ரவரி 01, 2026 அன்று "ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது" என்ற தலைப்பில் வெளியான முதலமைச்சர் ஸ்டாலினின் அறிக்கையை பார்க்கமுடிந்தது.
அதில் ஒன்றிய நிதி அமைச்சர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் ஏழைகள் பெண்கள் விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதே போல் மாலை மலர் ஊடகத்திலும் பிப்ரவரி 01, 2026 அன்று, பெரிதும் எதிர்பார்த்திருந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டு இது குறித்து செய்தி வெளியிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது.

முடிவு:
எனவே, “ஒன்றிய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் எந்த கேள்வியும் எழுப்பவில்லை” என தவெக செய்தி தொடர்பாளர் ஆனந்த் அஜித் கூறியுள்ள செய்திகள் தவறானவை. பிப்ரவரி 01, 2026 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.