யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பதி லட்டு விவகாரம்: பாவத்தை போக்குவதற்காக திருமலையில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி! தற்போது தேசிய அளவில் பேசுப்பொருளாகி இருக்கும் விவகாரம் திருப்பதி லட்டு. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக அறிக்கை வெளியானது. இது பெருமளவில் சர்ச்சையை கிளப்பியது.
பரவிய செய்தி
திருப்பதி லட்டு விசயத்தில். இந்துக்கள் நம்பிக்கயை கேலி செய்த நடிகர் கார்த்தியை மன்னிப்பு கேட்க வைத்த ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்...
திருமலை படிகளில் பரிகார பூஜை செய்கிறார்

விரிவான விளக்கம்
தற்போது தேசிய அளவில் பேசுப்பொருளாகி இருக்கும் விவகாரம் திருப்பதி லட்டு. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக அறிக்கை வெளியானது. இது பெருமளவில் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த செய்தியையொட்டி திருமலா திருப்பதி கோயிலின் படிகளைக் கழுவி ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பரிகாரம் செய்கிறார் எனக் கூறி 0:52 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
உண்மை என்ன ?
பரவிவரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இது பவன் கல்யாண் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் படிகளுக்கு பூஜை செய்தபோது (TTD) எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிந்தது.
Times Now Seithi என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி கனக துர்கா கோயிலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் சடங்குகளை செய்த பவன் கல்யாண் என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு பதிவு செய்திருப்பதை கவனிக்க முடிந்தது.
மேலும், TheHindu இணையதளப்பக்கத்தில் செப்டம்பர் 24, 2024 அன்று செய்தி ஒன்று பதிவாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
அதில், TTD லட்டு விவகாரம்: எனத் தலைப்பினை குறிப்பிட்டு ’ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர ஸ்வாமிவர்லா தேவஸ்தானதில்’ 11 நாள் பிராயச்சித்த தீட்சையில் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண் கோயில் சுத்திகரிப்பு சடங்கை செய்ததாக குறிப்பிட்டிருந்தது. எம்.பி.க்கள் கேசினேனி சிவநாத், பாலசௌரி, எம்.எல்.சி ஹரிபிரசாத் உட்பட பலர் கலந்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், TimesOfIndia இணையதளப்பக்கதிலுமே செப்டம்பர் 24, 2024 இதே தகவலைத்தான் குறிப்பிட்டிருந்தனர்.

இவற்றிலிருந்து, பவன் கல்யாண் திருமலை கோயில் படிகட்டுகளுக்கு பூஜை நடத்தி பரிகாரம் செய்ததாகக் கூறும் தகவல் உண்மையானதல்ல என்பதை அறியமுடிகிறது.
முடிவு :
நம் தேடலில், திருப்பதி லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக எழுந்த செய்தியையொட்டி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பூஜை நடத்தி பரிகாரம் செய்தது உண்மைதான். ஆனால் அது திருமலை திருப்பதி தேவஸ்தான படிகளுக்கு அல்ல. விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா மல்லேஸ்வர ஸ்வாமிவர்லா தேவஸ்தானம் எனும் கோயிலில்தான் பூஜை பரிகாரம் செய்தார் என்பதுதான் உண்மையான தகவல் .