யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டின் Police-to-Population ratio என்பது இந்தியாவின் தேசிய சராசரியை நல்ல நிலையிலே இருக்கிறது. மேலும், இந்த விகிதத்தில் பீகார் தான் இந்திய அளவில் மிக மோசமான நிலையில் உள்ளது.
பரவிய செய்தி
”தமிழ்நாட்டில் போலீஸ்க்கும் மக்களுக்கும் இடையிலான விகிதம் (Police-to-Population Ratio), இந்திய சராசரியைவிட குறைவாக இருப்பது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிடவும் குறைவாக இருக்கிறது” - ஆனந்த ஜித், தவெக.
விரிவான விளக்கம்
சமீபத்தில் ‘The Fire Media’ என்னும் யூட்யூப் தளம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தவெக கட்சியைச் சேர்ந்த ஆனந்த ஜித் என்பவர், ’தமிழ்நாட்டை பொறுத்த வரையில் போலீஸ்க்கும் மக்களுக்கும் இடையிலான விகிதம் (Police-to-Population Ratio), இந்திய சராசரியைவிட குறைவாக இருப்பது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிடவும் குறைவாக இருக்கிறது’ என்று கூறினார்.
உண்மை என்ன?
’Police-to-Population ratio’ விகிதம் என்பது எத்தனை மக்களுக்கு ஒரு போலீசார் பணியில் இருக்கிறார்கள் என்ற வகையிலோ அல்லது ஒரு லட்சம் மக்களுக்கு எத்தனை போலீசார் பணியில் இருக்கிறார்கள் என்ற வகையிலோ கணக்கிடப்படுகிறது. இதனால், ’Police-to-Population ratio’ குறைவாக இருந்தால் அந்த மாநிலம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொருள். இது புரியாமல் ’Police-to-Population ratio’ குறைவாக இருப்பது மோசமான நிலை என்பதைப் போல் தவறாக பேசிகிறார் ஆனந்த ஜித்.
‘India Justice Report 2025’ ஆவணத்தில் மாநிலவாரியாக Police-to-Population ratio-வின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை காண்டோம். ஜனவரி 2023 நிலவரத்தின் படி, இந்தியாவின் தேசிய சராசரியாக 843 மக்களுக்கு ஒரு போலீஸ் என்ற அளவில் உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 710 மக்களுக்கு ஒரு போலீஸ் பணியில் உள்ளனர். இது தேசிய சராசரியைவிட குறைவாகும். இந்த விகிதம் எந்த அளவிற்கு குறைவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த மாநிலம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொருள்.
இந்த வகையில் தெலுங்கானா, கேரளா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டைவிட பின்தங்கியே இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 504 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதத்தில் உள்ளது. இந்த வகையில் பஞ்சாப் இந்தியாவிலே முன்னோடியான மாநிலமாக இருக்கிறது. இது பெரிய மாநிலங்களின் நிலவரமாகும். சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அதேபோல், பீகார் மாநிலத்தில் 1522 பேருக்கு ஒரு போலீஸ் மட்டுமே உள்ளனர். இது மிகவும் பின்தங்கிய நிலையாகும். இதனால் காவல்துறையினருக்கு பணிச்சுமை மிக அதிகமாக இருக்கும். வழங்குகளை விசாரிக்க போதுமான போலீஸார் இருக்கமாட்டார்கள்.
அதேபோல், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை போலீஸ் இருக்கிறார்கள் என்றும் தேடினோம். 2023ஆம் ஆண்டின் நிலவரத்தின் படி, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 159 போலீஸார் இருந்தனர். இதிலும் பஞ்சாப் மாநிலம் முன்னோடியாக இருக்கிறது. பஞ்சாபில் ஒரு லட்சம் மக்களுக்கு 241 போலீஸார் உள்ளனர். ஆனால் பீகாரில் ஒரு லட்சம் மக்களுக்கு 81 போலீஸார் மட்டுமே உள்ளனர். மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டைவிட பின் தங்கியே உள்ளது.
இதிலிருந்து, தமிழ்நாட்டின் Police-to-Population ratio என்பது இந்தியாவின் தேசிய சராசரியை நல்ல நிலையிலே இருக்கிறது. மேலும், இந்த விகிதத்தில் பீகார் தான் இந்திய அளவில் மிக மோசமான நிலையில் உள்ளது.
முடிவு:
Police-to-Population Ratio என்னும் விகிதத்தில் தமிழ்நாடு இந்திய சராசரியைவிடவும் இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களைவிடவும் மோசமாக இருப்பதாக தவெகவைச் சேர்ந்த ஆனந்த ஜித் தவறாக கூறியுள்ளார்.