யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராகுல் காந்தியுடன் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் வழக்கறிஞர் சையத் மஹ்மூத் ஹசன். இவர் நீதிபதி அல்ல. இவர் ஜூலை 15 அன்று லக்னோ நீதிமன்றத்திற்கு தனது வழக்கு விசாரணைக்காக வந்திருந்தபோது, ராகுல் காந்தியும் வேறு வழக்கு தொடர்பாக அங்கு சென்றிருந்தார், அப்போது அங்கிருந்த பலரும் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
பரவிய செய்தி
ராகுல் மீது பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட சூழ்நிலையில், லக்னோ நீதிமன்றத்தில் ராகுல்வின் இந்தப் படம் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர்ப்பிரகடனம்
ராகுலுக்கு பிணை வழங்கிய நீதிபதி அவரோடு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.

விரிவான விளக்கம்
ஜூலை 15, 2025 அன்று லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில், 2022 பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் நீதிபதி ஒருவர் ஜாமீன் வழங்கும்போது ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்ததாகக் கூறி, புகைப்படம் ஒன்றை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ராகுலை நேரில் பார்த்து ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு நீதிபதியின் ஆசையை அவர் நிறைவேற்றிக் கொண்ட விதம்தான் அசூயையாய் இருக்கிறது! நீதிக்கு தலை வணங்கும் ராகுல்! pic.twitter.com/jKiJWVyStA
உண்மை என்ன?
பரவி இந்த செய்தி குறித்து Keywords மூலம் கூகுளில் தேடி பார்த்தோம். அப்போது நியூஸ் 24 ஹிந்தி ஊடகத்தில், "'Neither Rahul Gandhi's lawyer nor judge', the person who took the selfie told the truth" என்ற தலைப்பில் ஜூலை 15ஆம் தேதி பரவி வரும் புகைப்படத்துடன் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் "ராகுல் காந்தியுடன் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் வழக்கறிஞர் சையத் மஹ்மூத் ஹசன். இவர் ஜூலை 15 அன்று லக்னோ நீதிமன்றத்திற்கு தனது வழக்கு விசாரணைக்காக வந்திருந்தபோது, ராகுல் காந்தியும் வேறு வழக்கு தொடர்பாக அங்கு சென்றிருந்தார், அப்போது அங்கிருந்த பலரும் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். உடனே வழக்கறிஞர் சையத் மஹ்மூத் ஹசனும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது" என்று அவரே கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த செய்தி அறிக்கையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ், பாஜகவை சேர்ந்த அமித் மாளவியா பதிவின் ஸ்கிரீன் ஷாட்டைசமூக ஊடகங்களில் வெளியிட்டு தெளிவுபடுத்தியது குறித்து கூறப்பட்டிருந்தது. அந்த பதிவில், "இது வழக்கறிஞர், நீதிபதி அல்ல" என்ற ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார்.
अरे "सूत्र" मालवीय..
ये वकील साहब है, जज साहब नही।
जरा "सूत्र"मजबूत करो, 2 रुपल्ली के भरोसे कब तक रोजी रोटी चलाओगे। pic.twitter.com/3DA6Oj2RaN
இதே போல் நவ்பாரத் டைம்ஸ் ஊடகத்தின் செய்தியிலும், வைரல் புகைப்படத்தில் இருப்பது வழக்கறிஞர் சையத் மஹ்மூத் ஹசன் என்றும், நீதிபதி அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை மேலும் உறுதி செய்ய, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய லக்னோ நீதிமன்றத்தின் நீதிபதியான அலோக் வர்மா குறித்து தேடி பார்த்தோம். அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில், அவரது தகவல்களையும், புகைப்படத்தையும் பார்க்கமுடிந்தது. இதையடுத்து வைரலாகும் புகைப்படம் ராகுல் காந்தியுடன் இருப்பது நீதிபதி அலோக் வர்மா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

முடிவு:
நம் தேடலில், ராகுலுக்கு பிணை வழங்கிய நீதிபதி, அவரோடு செல்பி எடுத்துக் கொண்ட காட்சி எனப் பரவும் செய்திகள் தவறானவை. மாறாக புகைப்படத்தில் இருப்பது வழக்கறிஞர் சையத் மஹ்மூத் ஹசனாகும்.