யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது கல்லூரி மாணவர்கள் தான் என்றும் அவர்களுக்கு எந்த பின்புலமும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கோவை அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் செய்தியை பதிவிட்டு, இது ‘0.5’ எனப்படும் ‘உள்நாட்டு விரோதிகளின் சதியா’ என்று மேஜர் மதன் குமார் என்பவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
0.5??? Or mischief? https://t.co/G6FrvpsJ5D
உண்மை என்ன:
பரப்பப்படும் செய்தி குறித்து இணையத்தில் தேடுகையில், ’News Cloud Coimbatore’ என்ற செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘கோவை ஆவாரம்பாளையம் இரயிலில் சில இளைஞர்கள் கற்களை எறிந்ததாகவும், தண்டவாளத்தில் சிறு சிறு கற்களை வைத்ததாகவும் இது தொடர்பாக 5 இளைஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்’ தெரியவருகிறது. அவர்கள் சாதாரண கல்லூரி மாணவர்கள் என்றும் காவல்துறை சார்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது பகிரப்படும் செய்தி காணொளியிலும் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதனை ’0.5’-களின் சதி வேலையா? என்று மேஜர் மதன்குமார் கேள்வி எழுப்புவது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. இதே ’0.5’ என்பதை மேஜர் மதன் வழக்கமாக தனது பதிவுகளில் பயன்படுத்தி வருகிறார்.
இந்த ’0.5’ என்பது பற்றி தேடுகையில், ‘The Print’ தளத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையைக் காணமுடிந்தது. அதன்படி, ’0.5’ என்பது முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத்-தால் முன்வைக்கப்பட்ட சொல்லாடல் என்பது தெரியவருகிறது . பிபின் ராவத், ‘இந்தியா 2.5 (இரண்டரை) முனையில் போர் செய்யவேண்டிய நிலை இருப்பதாக சொன்னார். ஒன்று, பாகிஸ்தான், மற்றொன்று சீனா. அந்த ‘0.5’ என்ன என்பதை அவர் தெளிவாக விளக்கவில்லை. ஆனால் இது பெரும்பாலும், அரசாங்கத்தை எதிர்க்கின்ற உள்நாட்டு விரோதிகள் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. குறிப்பாக பல நேரங்களில் இசுலாமியர்களைக் குறிவைத்தும், இடதுசாரி பின்புலமுள்ளவர்களைக் குறிவைத்தும் வலதுசாரி ஆதரவாளர்களால் பேசப்படுகிறது.

சொந்த நாட்டு மக்களை அவர்களது அரசியல் நிலைபாடுகளுக்காக 'உள்நாட்டு விரோதி' என்று வகைப்படுத்தும் இந்த பார்வை அடிப்படையிலே தவறானது. மேலும், இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள் என்றும் அவர்களுக்கு எந்த பின்புலமும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளதுடன் சிசிடிவி காட்சியையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த சம்பவத்தோடு ‘உள்நாட்டு தேச விரோதிகளின் சதி’ என்ற Conspiracy theoryயை கற்பனையாக உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார் இந்த மேஜர் மதன்குமார்.
முடிவு:
கோவை அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த சம்பவத்தை ‘உள்நாட்டு தேச விரோதிகளின் சதி?’ என தவறாக திரித்து உள்நோக்கத்துடன் பரப்புகிறார் மேஜர் மதன்குமார்.
