யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவை, மதுரை நகரங்களின் மக்கள்தொகையை காரணம் காட்டி ஒன்றிய நகர்ப்புற விவகார அமைச்சகம் இந்நகரங்களுக்கான மெட்ரோ திட்டத்தை நிராகரித்துள்ளது.
பரவிய செய்தி
”மெட்ரோ இரயில் கோவைக்கு வராது என்று ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்பி தவறான அரசியலை இந்தியா கூட்டணியினர் செய்கிறார்கள். திட்ட அறிக்கையில் சில சந்தேகங்கள் இருக்கிறது என்று மெட்ரோ நிறுவனம் மிகத் தெளிவாக சொல்லிருக்கிறார்கள் ” - தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மூத்த தலைவர்.


விரிவான விளக்கம்
நவம்பர் 19ஆம் தேதி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தந்தார். அதே நாளில், கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது பேசு பொருளானது.
இது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் பத்திரியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மெட்ரோ இரயில் கோவைக்கு வராது என்று ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்பி தவறான அரசியலை இந்தியா கூட்டணியினர் செய்கிறார்கள். திட்ட அறிக்கையில் சில சந்தேகங்கள் இருக்கிறது என்று மெட்ரோ நிறுவனம் மிகத் தெளிவாக சொல்லிருக்கிறார்கள் ” என்று பேசினார்.
பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்... பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது முதலமைச்சர் அவரை ஏன் வரவேற்கவில்லை..? தமிழிசை கேள்வி #Chennai #TamilisaiSoundarajan #BJP #CMMKStalin #DMK #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/gO32fNeIMf
மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம் - தமிழிசை சௌந்தரராஜன்
#TamilisaiSoundararajan | #BJP | #MetroRail pic.twitter.com/xJvG3zlGDE
உண்மை என்ன?
மதுரை, கோவை மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’THE HINDU’ ஆங்கில செய்தித்தளத்தில் இது குறித்து வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதில், ‘2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 20 லட்சம் மக்கள்தொகை இல்லை என்பதை காரணம் காட்டி ஒன்றிய நகர்ப்புற விவகார அமைச்சகம் இந்நகரங்களுக்கான மெட்ரோ திட்டத்தை நிராகரித்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘”மெட்ரோ திட்டங்கள் அதிக செலவுபிடிக்கக்கூடியவை அதனால் அவை நீண்டகால நிலைத்தன்மையை கணக்கில் கொண்டு கவனமாக திட்டமிடப்படவேண்டும். மதுரை, கோவை நகரங்களுக்கு BRTS போன்ற செலவு குறைந்த நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள் நன்கு பொருத்தமுள்ளதாக இருக்கும். இந்த காரணங்களால், கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகிறது” என்று நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் ‘THE NEW INDIAN EXPRESS’ வெளியிட்டுள்ள செய்தியிலும், ‘2017 மெட்ரோ ரயில் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி மதுரை கோவை நகரங்களின் மக்கள்தொகை குறைவாக இருப்பதை காரணம் காட்டி இந்நகரங்களுகான மெட்ரோ இரயில் குறித்து தமிழ்நாடு அரசு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, மதுரை கோவை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ இரயில் தொடர்பாக தமிழ்நாடு அரசு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நகர்ப்புற விவகார அமைச்சகம் நிராகரித்துள்ளது என்பதை தெளிவாக அறியமுடிகிறது.
முடிவு:
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்றும் திட்ட அறிக்கையில் சில சந்தேகங்களை மட்டுமே மெட்ரோ நிறுவனம் எழுப்பியுள்ளதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறுவது தவறான தகவலாகும்.