யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நவோதயா பள்ளிகள் அதன் முழு கொள்திறனுடன் இயங்கினால் கூட ஒரு பள்ளிக்கு 560 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 38 பள்ளிகளுக்கு 21,280 மாணவர்கள் தான் படிக்கமுடியும். இது சுமந்த ராமன் சொல்வதில் பாதி அளவு கூட இல்லை.
பரவிய செய்தி
”தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இலவசமாக கல்வி பெறுவார்கள்” - சுமந்த் ராமன்.

விரிவான விளக்கம்
'நவோதயா பள்ளி' திட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1986ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர்த்து வந்துள்ளனர். பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக கூட 2017ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, ’நவோதயா பள்ளி’ திட்டத்தின் மூலம் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக கூறி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட ’நவோதயா பள்ளி’ திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டில் முன்மொழிக் கொள்கையை பாஜக திணிக்க நினைப்பதை காரணமாக கூறி அத்திட்டத்திற்கு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், நவோதயா பள்ளி திட்டத்தை அமல்படுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம், ’ஒன்றிய அரசும் மாநில அரசும் கூட்டாக ஆலோசனை நடத்தி நவோதயா பள்ளி திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மேலும், ’தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் அமைக்க தேவையான நிலத்தின் அளவு குறித்து கண்டறியவும்’ உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ”தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இலவசமாக கல்வி பெறுவார்கள்” என்று பாஜக ஆதரவாளரான சுமந்த் ராமன் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.

உண்மை என்ன?
‘நவோதயா பள்ளிகள்’ திட்டம் குறித்து முதலில் தேடினோம். ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஒரு நவோதயா பள்ளி அமைக்கப்படவேண்டும் என்று தெரியவருகிறது.
ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்தியா முழுவதும் தற்போது வரை 661 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும், ஒரு நவோதயா பள்ளி அதன் முழு கொள்திறனுடன் இயங்கினால் அதில் அதிகபட்சம் 560 மாணவர்கள் படிக்க முடியும் என்று ஒன்றிய அரசு தகவலின் படி தெரியவருகிறது.

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி நாடாளுமன்றத்தில் கொடுத்துள்ள தகவலின் படி, இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள் முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் 2,89,155 மாணவர்கள் படித்து வருவதாக தெரிகிறது.

அதாவது, சராசரியாக ஒரு நவோதயா பள்ளிக்கு 437 மாணவர்கள் என்ற விகிதத்தில் படிக்கிறார்கள் என்பதே எதார்த்த நிலையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்று சொல்லப்பட்டுள்ளதால் 38 நவோதயா பள்ளிகளில் சுமார் 16,530 மாணவர்களே படிக்க முடியும்.

ஒரு நவோதயா பள்ளி அதன் முழு கொள்திறனுடன் இயங்கினால் கூட அதிகபட்சம் 560 மாணவர்கள் தான் படிக்கமுடியும். இதனடிப்படையில் பார்த்தால் கூட தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 21,280 மாணவர்கள் தான் நவோதயா பள்ளிகளில் படிக்க முடியும்.

மேலும், தேசிய அளவில் எடுத்துக் கொண்டால் கூட உத்தர பிரதேசத்தில் ஒரு நவோதயா பள்ளியில் சராசரியாக 470 மாணவர்களும், மத்தியப் பிரதேசத்தில் 487 மாணவர்களும், பீகாரில் 453 மாணவர்களுமே படிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதவாது எந்த மாநிலத்திலும் அதன் முழு கொள்திறனான 560 மாணவர்கள் என்ற எண்ணிக்கையை நவோதயா பள்ளிகள் எட்டியதில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
யதார்த்த கணக்கு படி பார்த்தால் 16,530 மாணவர்களும், ஆவணத்தில் கொடுக்கப்பட்டு அதிகபட்ச கொள்திறன் படி பார்த்தால் 21,280 மாணவர்களும் தான் தமிழ்நாட்டில் நவோதய பள்ளிகளில் படிக்க முடியும்.
இவ்வாறு இருக்க, 50,000-துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டில் நவோதய பள்ளிகளில் படிக்கமுடியும் என்று சுமந்த ராமன் ஆதாரமற்ற பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என்பதை மேற்கூறிய விவரங்களிலிருந்து அறிய முடிகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவசமாக கல்வி பெறுவார்கள் என்று சுமந்த் ராமன் பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்.