யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மரபு வழக்கப்படி தீபம் ஏற்றப்படும் இடத்தை தவிர்த்து, தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தர்கா நிர்வாகம் நீதிமன்றத்திலே வாதாடியுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்துத்துவவாதிகளை மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, ’கல்தூணில் தீபம் ஏற்றலாம்’ என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜனவரி 6ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ‘News 18’ செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசிய சுமந்த ராமன், “தீபம் ஏற்றுவதை தர்கா நிர்வாகம் கூட எதிர்க்கவில்லை என்றாலும், திமுக அரசு அவர்களை இதற்குள் கொண்டு வந்து இதை ஒரு பிரச்சினையாக்க பார்க்கிறார்கள். இந்த அரசாங்கம் தீவிரவாதத்தை விட அதிகமாக வெறுப்பை கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்” என்று குறிப்பிடுகிறார்.
உண்மை என்ன?
நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு கடந்த ஜனவரி 6ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு நகலை ஆய்வு செய்தோம்.
அதில் பக்கம் எண் 75ல், ‘மாநில அரசு, இந்து அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம், தர்கா நிர்வாகத்தின் பிரதிநிதியாக இருக்கும் வஃப் வாரியம் ஆகியோர் ‘வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி தீபத்தை தர்கா அருகில் உள்ள தூணில் ஏற்றுவதை எதிர்த்து வாதிட்டதாக’ தீர்ப்பிலே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து கல்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தர்கா நிர்வாகம் நீதிமன்றத்திலே வாதாடியுள்ளது தெரியவருகிறது.
இதேபோல் திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தர்கா நிர்வாகம் தெரிவித்தாகவும், திரிக்கப்பட்ட பொய்யான தகவலை ‘ரிப்பளிக் டிவி’ பரப்பியது. அதன் நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
‘திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதை தர்கா கூட எதிர்க்கவில்லை’ என்று சுமந்த் ராமன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.