யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளின் உறுப்பினர்கள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாதிட்டனர்.
பரவிய செய்தி
“கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போது நாடாளுமன்றத்தில் அதனை எதிர்த்தது மூக்கையா தேவர் மட்டுமே” - சீமான்.
விரிவான விளக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘இந்திய அரசு நாடாளுமன்றத்தில் எவ்வித பொது விவாதமும் கருத்துக் கேட்கும் நடத்தாமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டது. இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே ஒருவர் மூக்கையா தேவர் மட்டும் தான்’ என்று பேசினார்.
உண்மை என்ன?
கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட பிரச்சினை குறித்து 1974ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதங்களை காண முடிந்தது.

அந்த விவாதத்தின் போது அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாஞ்சில் மனோகரன்,செழியன் ஆகியோரும்; முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம். முஹம்மது ஷெரீஃப் ஆகியோரும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் அரசின் முடிவை எதிர்த்து வாதிட்டனர். மேலும் ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் கேசரி தியோ கூட இதனை எதிர்த்து பேசியிருக்கிறார். அப்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த P. K. மூக்கையா தேவரும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த இந்திய அரசின் முடிவை எதிர்த்து பேசினார்.

மேலும் ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில், திமுக, அதிமுக, சோசியலிஸ்ட் கட்சி, ஜன சங்கம் (பாஜகவின் முன்னோடி கட்சி) ஆகிய கட்சிகள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் முடிவை எதிர்த்ததாக தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இதிலிருந்து, திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளின் உறுப்பினர்கள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாதிட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
இதனை மறைத்து, மூக்கையா தேவர் மட்டுமே, கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியதாக தவறான தகவலை சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.