
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்நிலையில், "நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய போலி கையெழுத்து நாடகத்தை உச்ச நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்ததோடு, இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி நிராகரித்து விட்டது " என்று கூறி "நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய திமுக கட்சியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜக மற்றும் அதிமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த செய்தியில், "நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்யக் கோரி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று ஜனவரி 2 செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது." என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய போலி கையெழுத்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது உச்ச நீதிமன்றம் இந்த மனு ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தது விட்டது. ஆனால் இது எந்த ஊடகத்திலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டது திராவிட மாடல் அரசு♂️♂️♂️♂️ pic.twitter.com/V3PkgFwUjr
— IT&SMwing Namakkal East (@Rajendran_tnbjp) January 9, 2024
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய போலி கையெழுத்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது உச்ச நீதிமன்றம் இந்த மனு ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தது விட்டது. ஆனால் இது எந்த ஊடகத்திலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டது திராவிட மாடல் அரசு♂️♂️♂️♂️ pic.twitter.com/DXfwfxiQkO
— Maha Simha (@maha_simha) January 5, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் பதிவுகளில் உள்ள ஸ்க்ரீன்ஷாட் குறித்து ஆய்வு செய்ததில், இது edexlive என்ற பக்கத்தில் கடந்த ஜனவரி 02 அன்று வெளியிடப்பட்ட செய்தி என்பதை அறிய முடிந்தது. ஆனால் அதில் "நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 2 செவ்வாய்க்கிழமை அன்று தள்ளுபடி செய்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இது தவறான செய்தியாகும். ஏனெனில் கடந்த ஜனவரி 02 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, திமுக தாக்கல் செய்திருந்த மனுவைக் கிடையாது. திமுகவுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு மனுவைத் தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு குறித்து கடந்த ஜனவரி 02 அன்று livelaw வெளியிட்டுள்ள செய்தியில், திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை (PIL) உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) தள்ளுபடி செய்தது. குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து, மனுவை நிராகரித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு திமுகவிற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

இதே போன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியிலும், "நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது." என வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க: நீட் விலக்கு இயக்கத்தில் கையெழுத்திட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !
மேலும் படிக்க: நீட்-க்கு எதிராக 100% எம்பிபிஎஸ் சீட்களும் தெலங்கானாவிற்கே என சட்டம் இயற்றியதாகப் பரவும் தவறான செய்தி !
முடிவு:
நம் தேடலில், திமுக நீட் தேர்விற்கு எதிராக தொடங்கிய கையெழுத்து இயக்கத்தை உச்சநீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், திமுகவின் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.