யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பேராசிரியர் ஞானசம்பந்தன் உண்மையில் நடந்த சம்பவத்தை திரித்து மிகைப்படுத்தி நிறைய தவறான தகவல்களுடன் சொல்லியுள்ளார்.
பரவிய செய்தி
“கைகளில் விலங்கோடு கழிவறைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, கப்பலின் புகைபோக்கி வழியாக மேலே சென்று, கப்பலில் இருந்து தலைகீழாக கடலில் பாய்ந்து விலங்கோடு நீந்திப் போயி பாரிஸ் கடற்கையில் இருந்து தப்பித்து ஓடினார் விநாயக் சர்வார்க்கர்”” - பேராசிரியர் ஞானசம்பந்தன்.
விரிவான விளக்கம்
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பேராசிரியர் ஞானசம்பந்தன் தனது யூடியூப் தளத்தில் ’இந்துத்துவத்தின் பிதாமகன்’ என்ற தலைப்பில் சர்வார்க்கர் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசியுள்ள அவர், “கைகளில் விலங்கோடு கழிவறைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, கப்பலின் புகைபோக்கி வழியாக மேலே சென்று, கப்பலில் இருந்து தலைகீழாக கடலில் பாய்ந்தார் விநாயக் சர்வார்க்கர். விலங்கோடு கடலில் குதித்த அவர் நீந்திப் போயி பாரிஸ் கடற்கையில் இருந்து தப்பித்து ஓடுடினார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ’லண்டனுக்கு படிக்கச் சென்ற சார்வாக்கர் அங்கே ‘India House’ என்ற அமைப்பை உருவாக்கியதாக’ பேராசிரியர் ஞானசம்பந்தன் கூறுகிறார்.
உண்மை என்ன?
விநாயக் சர்வார்க்கர் கப்பலிருந்து தப்பிய சம்பவம் குறித்து தேடினோம். சர்வார்க்கர் குறித்து விகரம் சம்பத் என்பவர் எழுதிய ’Savarkar: Echoes from a Forgotten Past’ என்ற புத்தகத்தில் இதுகுறித்து எழுதப்பட்டிருப்பதை காண்டோம்.
அப்புத்தகத்தில், ‘கழிவறையில் இருக்கும் 12 inch விட்டம் உள்ள ’porthole’ வழியாக சார்வாக்கர் கடலில் குதித்ததாகவும்; கடலில் குதித்து 10 முதல் 12 அடிகள் (Feets) நீந்தி கப்பல் நிறுத்த அமைக்கப்பட்டிருந்த தரையை அடைந்துவிட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘porthole’ என்பது கப்பல், விமான ஆகியவற்றில் வட்டமாக இருக்கும் சன்னல் போன்ற அமைப்பாகும்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் சொல்வது போல் கப்பலில் புகைபோக்கி (Chimney) வழியாக சார்வாக்கர் கடலில் குதிக்கவில்லை, ’porthole’ என்ற சன்னல் வழியாக தான் குதித்திருக்கிறார்.

அதேபோல், ‘The Savarkar Case’ என்ற ஆவணத்திலும் இந்த சம்பவம் குறித்த தகவல்களைக் காணமுடிகிறது. இந்த வழக்கு 1910 ஜூலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கப்பல் மூலமாக சார்வாக்கர் கொண்டு செல்லப்படும் போது ’மார்சேயில்ஸ்’ என்ற இடத்தில் சார்வாக்கர் தப்பிச் செல்ல முயன்றது குறித்து நடத்தப்பட்ட வழக்காகும்.

அந்த ஆவணத்தில் ’மார்சேயில்ஸ்’ கடற்கரையில் நின்றிருந்த ’மோரியா’ என்ற கப்பலில் இருந்து தப்பிக்க முயன்ற சார்வாக்கரை பிடித்து மீண்டும் கப்பலில் ஒப்படைத்த பிரெஞ்சு கடற்படையைச் சேர்ந்த பிரிகேடியர் அதிகாரியின் வாக்குமூலம் இடம்பெற்றிருக்கிறது.
‘கப்பலில் உள்ள ’porthole’ (சன்னல்) வழியாக கடலில் குதித்து நீந்தி கரைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் 500 மீட்டர் வரை ஓடிய சார்வாக்கரை அந்த பிரிகேடியர் அதிகாரி பிடித்து கப்பலில் ஒப்படைத்ததாகவும்’ அந்த பிரிகேடியர் அதிகாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் சொல்வது போல் இந்த சம்பவம் பாரிஸில் நடக்கவில்லை, ‘மார்சேயில்ஸ்’-ல் நடந்தது என்பது தெளிவாகிறது.

சார்வாக்கரே தனது வாழ்க்கை குறித்து எழுதிய ‘The Story of My Transportation for Life’ என்ற புத்தகத்தில் கூட இந்த சம்பவம் குறித்து எழுதப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ‘மார்சேயில்ஸ்’ சம்பவத்தை குறிப்பிட்டு ஒரு சிப்பாய் சார்வாக்கரிடம் ‘நீங்கள் எத்தனை நாட்கள் கடலில் நீந்தினேர்கள்?’ என்று கேட்டதாகவும், அதற்கு சார்வாக்கர், ‘வெறும் 10 நிமிடங்கள் கடலில் நீந்தி தான் கரையை அடைந்துவிட்டதாகவும்’ கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, சார்வாக்கர் நடுக்கடலில் குதித்தது போன்று சொல்லப்படுவது தவறான தகவலாகும். அவர் கடற்கரையில் உள்ள கப்பல் நிறுத்தும் இடத்தில் தான் குதித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

லண்டனில் உள்ள ‘India House’ என்பது குறித்து தேடினோம். ஆனால் லண்டன் ஹைகேட் தெருவில் உள்ள ‘India House’ கட்டிடம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வரும் மாணவர்களும், புரட்சியாளர்களும் தங்களது கருத்துகளை விவாதிப்பதற்கான இடமாக இருந்திருக்கிறது. இதனை லாலா லஜபதி ராய் மற்றும் பாலகங்காதர திலகர் ஆகியோரின் ஆதரவுடன், ஷியாம்ஜி கிருஷ்ணா என்பவர் தான் உருவாக்கியுள்ளார். இதனை சார்வாக்கர் உருவாக்கியதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும்.
முடிவு:
சார்வாக்கர் கப்பலிருந்து தப்பிக்க முயன்ற சம்பவத்தை திரித்து பல்வேறு தவறான தகவல்களுடன் பேசியிருக்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன்.