
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
அந்த வீடியோவில் 5 பேர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் உள்ள பேனரில் ‘RASHTRIYA SWAYAMSEVAK SANGH’ என எழுதப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் பேனரில் உள்ள லோகோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லோகோ கிடையாது. எனவே அந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இதன் முழு வீடியோ, ‘AWAAZ INDIA TV’ என்னும் யூடியுப் பக்கத்தில் கடந்த 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இந்தியில் இருந்த அந்த வீடியோவின் தலைப்பு மற்றும் நிலைத்தகவலை (Description) மொழி பெயர்த்துப் படித்தோம். அத்தலைப்பில் ‘ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஜனார்தன் மூன் (Janardan Moon)’ என்றுள்ளது. ஆனால், இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பெயர் மோகன் பகவத்.
கே. பி. ஹெட்கேவர் 1925ல் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக்) அமைப்பு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. எனவே அப்பெயரில் தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்ய ஜனார்தன் மூன் என்பவர் விண்ணப்பித்துள்ளார்.
அப்படிப் பதிவு செய்யக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான செய்திகள் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘பாஸ்கர்’ ஆகிய தளங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது. ஜனார்தன் மூன் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் இந்தியக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது மோகன் பகவத் தலைமையிலுள்ள இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கிடையாது.
முடிவு :
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் தகவல் தவறானது. அது மோகன் பகவத் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் கிடையாது.