யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து பத்து வாக்குச் சாவடிகளில் வாக்களித்தார்” என்று ராகுல்காந்தி கூறியதாக, பாஜக தலைவர் எச்.ராஜா கூறும் செய்திகள் தவறானவை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “ஹரியானாவில் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களித்த 22 பெண்களுக்கு 'பிரேசிலிய மாடலின்' புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றே கூறியுள்ளார்.
பரவிய செய்தி
Madurai, Tamil Nadu: BJP leader H. Raja says, "He produced that one Brazilian model — claiming she voted 20 times at 10 booths. But the woman herself denied it, saying she has not visited India recently. So Rahul Gandhi has become a chronic liar..."

விரிவான விளக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்றும் ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை என்றால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறியிருந்தார். அதில் வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண்ணின் புகைப்படங்கள் பல இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பதை ராகுல் காந்தி. சுட்டிக் காட்டியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து பத்து வாக்குச் சாவடிகளில் வாக்களித்தார் என்று ராகுல்காந்தி கூறியதாக பேட்டியளித்திருந்தார்.
Madurai, Tamil Nadu: BJP leader H. Raja says, "He produced that one Brazilian model — claiming she voted 20 times at 10 booths. But the woman herself denied it, saying she has not visited India recently. So Rahul Gandhi has become a chronic liar..." pic.twitter.com/4xd2DrqRiy
உண்மை என்ன?
முதலில் பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வந்து வாக்களித்தாரா என்று ராகுல் காந்தி கூறினாரா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது ”LIVE: #VoteChori Press Conference - The H Files | Rahul Gandhi” என்ற தலைப்பில் ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில், நவம்பர் 5, 2025 அன்று நேரடியாக ஒளிபரப்பிய வீடியோவை பார்க்கமுடிந்தது.
அதில் ராகுல்காந்தி பேசியதை முழுமையாக பார்த்த பிறகு, “ஹரியானாவில் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களித்த 22 பெண்களுக்கு 'பிரேசிலிய மாடலின்' புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றே அவர் கூறியதை பார்க்கமுடிந்தது. மேலும் அதில் அவர், நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை அழிக்க மற்றும் தேர்தல் முறைகேடு மூலம் பாஜகவுக்கு முறையாக உதவுவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் தேர்தல் ஆணையம் இணைந்து செயல்படுதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து மேலும் தேடிய போது, ”What craziness is this: Brazilian 'model' reacts after Rahul Gandhi's Haryana voter-fraud allegation; claims old photo used” என்ற தலைப்பில் நவம்பர் 7 அன்று Times of India ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் இது குறித்து லாரிசா என்ற பிரேசில் மாடல் விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் தேர்தல்களுக்காக அவர்கள் என் பழைய படத்தைப் பயன்படுத்தி, என்னை இந்தியனாகக் காட்டுகிறார்கள் என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து பிரேசில் மாடல் லாரிசா வெளியிட்ட வீடியோ பதிவு குறித்து தேடினோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீனேட், அவரது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 5 அன்று லாரிசாவின் வீடியோவை பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. போர்த்துகீசிய மொழியில் இருந்த அந்த வீடியோ மொழிபெயர்த்து பார்த்தோம்.
Brazilian Model Larissa whose image has been used in Haryana for fake votes reacts to the big expose and irregularities shared by @RahulGandhi today
pic.twitter.com/tu51SkH5Dw
அதில் அவர் நகைச்சுவையாக, “நான் கிசுகிசுக்களைச் சொல்லப் போகிறேன். அவர்கள் என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படம் தான் 18 அல்லது 20 வயதில் இருக்கும் போது எடுக்கப்பட்டது. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக என்னை ஒரு இந்தியப் பெண்ணாக சித்தரிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
முடிவு:
எனவே, “பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து பத்து வாக்குச் சாவடிகளில் வாக்களித்தார்” என்று ராகுல்காந்தி கூறியதாக, பாஜக தலைவர் எச்.ராஜா கூறும் செய்திகள் தவறானவை. “ஹரியானாவில் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களித்த 22 பெண்களுக்கு 'பிரேசிலிய மாடலின்' புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றே ராகுல்காந்தி கூறியுள்ளார்.