யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த 2015-இல் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் பொதுஇடங்களில் வைத்து தாக்கிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், பெண்களை கிண்டல் செய்தவர்களுக்கு காவல்துறையின் சார்பில் நடுரோட்டில் தண்டனை வழங்கப்படுகிறது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
யோகி ஆதித்யநாத், பாஜக.. உத்தரப் பிரதேசம்.. பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்களை கவுரவிக்கும் காட்சி 😊.. தமிழகத்தில்.. பாஜக.. அண்ணாமலை 🔥 🔥 அவர்கள் ஒருவரே. பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடக்க தீர்வு.. https://t.co/q1IjHL6qPu
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது பல யூடியூப் பக்கங்களில் கடந்த 2015-ல் இருந்தே மத்தியபிரதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
“ABP NEWS” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, “இந்தூர் போலீசார் குற்றவாளிகளை சாலைகளில் பொது இடத்தில் அடித்து உதைக்கின்றனர்” என்று குறிப்பிட்டு கடந்த 2015 மே 29 அன்று பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அதில் குற்றவாளுகளுக்கு பயத்தை ஏற்படுத்தவே சாலைகளில் ஊர்வலமாக கூட்டி சென்று காவலர்கள் இவ்வாறு செய்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.
இதே போன்று, “IndiaTV” ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் பொதுஇடங்களில் வைத்து தாக்கினர் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், கடந்த 2015-இல் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் பொதுஇடங்களில் வைத்து தாக்கிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவர்களை காவல்துறையினர் தாக்குவதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவர்களை காவல்துறையினர் தாக்குவதாகக் கூறி பரவும் வீடியோ, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
