யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக கருப்பு உடை அணிந்து பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது.
பரவிய செய்தி
தலைநகர் டெல்லியில் வக்ஃப் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சகோதரி பிரியங்கா காந்தி அவர்கள்..
விரிவான விளக்கம்
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம் உள்ளிட்ட பல திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்ட வடிவமும் பெற்றது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி என்று கூறி 23 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
This is time for all muslims to go to street against this wakf act. If not then our homes might be taken back soon. Let us do two rakha prayer publicly in order to take the solidarity from our hindu brothers. https://t.co/DYN6a0MO8R
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், பரவி வரும் வீடியோ குறித்து ‘NDTV’ ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
கடந்த 2022 ஆகஸ்ட் 05 அன்று “பிரியங்கா காந்தி வத்ரா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார், போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்” என்ற தலைப்பில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் அப்படியே இடம்பெற்றுள்ளன. இந்த செய்தியின் மூலம், பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 5ந் தேதி போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை அறிய முடிகிறது.
இதே போன்று ‘Live Mint’ ஊடகப் பக்கத்திலும் “விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பிரியங்கா காந்தியை டெல்லி போலீசார் இழுத்துச் சென்றனர்” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில், டெல்லி காவல்துறைக்கும் பிரியங்கா காந்தி வத்ராவுக்கும் இடையிலான மோதலின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற உடையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்கு வெளியே உள்ள போலீஸ் தடுப்புகளைத் தாண்டிச் சென்றார், அதன் பிறகு போலீசார் அவரை தடுக்க முயன்றனர்” என்றும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன் மூலம் இது கடந்த 2022-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இந்த வீடியோ காட்சிகளை தற்போது வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான போராட்டம் என குறிப்பிட்டு தவறாக பரப்பி வருகின்றனர் என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தலைநகர் டெல்லியில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி என்று கூறி தற்போது பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.