யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674 ஆக உள்ளது.
பரவிய செய்தி
குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக உள்ளது - கார்த்திகா, நாம் தமிழர் கட்சி

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகா புதிய தலைமுறை ஊடகம் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
கார்த்திகா தெரிவித்த இந்த கருத்துக் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கமுடிந்தது. அதில் சரியாக 40வது பக்கத்தில், “2023-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறல் வகைகளின் அடிப்படையில் சாலை விபத்துகள்” என்று குறிப்பிட்டு தரவுகள் இருந்ததை பார்க்கமுடிந்தது.

அதில் 2022ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 4,201 ஆக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674 ஆக உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகம் என்று பரப்பி வருகிறார்.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674 ஆக உள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக உள்ளது என நாதகவை சேர்ந்த கார்த்திகா தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.