யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் போதையில் அரிவாளால் வெட்டிய வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி தவறானது. அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
பரவிய செய்தி
#RIP #suraj #தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற தலைப்பு போய் தலை குனிந்து தமிழகமாக இன்று மாறி உள்ளது இதற்கு காரணம் திமுக அரசு தான்
இவர் இறப்புக்கு தமிழகமே வெட்கி தலை குனிய வேண்டும்..
விடியல் ஆட்சியில் அவ லட்சணம்..
#justiceforsuraj #ShameOnYouMKStalin

விரிவான விளக்கம்
திருத்தணியில் ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அந்த வடமாநில இளைஞர் இறந்துவிட்டதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து தேடிப் பார்த்தோம்.
அப்போது புதிய தலைமுறை ஊடகத்தில் “வடமாநில தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம்.. ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம்” என்ற தலைப்பில், சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ இடம்பெற்றிருந்தது. அதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கையெழுத்து போட்டு விட்டு, வடமாநில இளைஞர் வீட்டிற்கு சென்று விட்டாரா என்று ஐஜி அஸ்ரா கர்க்யிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஐஜி, அந்த வடமாநில இளைஞர் கையெழுத்துப் போட்டுவிட்டு தனது ஊருக்கு சென்றுவிட்டதாகவும், மருத்துமனையை தொடர்புக் கொண்டு அவர் நலமாக இருப்பதையும் உறுதிப்படுத்தி கொண்டோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சன்நியூஸ் ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், வடக்கு மண்டல ஐ.ஜி. விளக்கமளித்திருந்தது பற்றி நியூஸ் கார்ட் வெளியாகியிருந்தது. அதிலும் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது என்றும், அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் எனவும் அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் போதையில் அரிவாளால் வெட்டிய வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி தவறானது. அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.