யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நம்பிக்கையின்மையின் காரணமாக மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகத்திற்கு நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், விஜய் மீது நம்பிக்கை இருப்பதால் ஒன்றிய அரசு இப்போது நிதியை வழங்கத் தயாராக உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் கூற்று போலியானது. அத்தகைய ஒரு கூற்றுக்கு அதிகாரப்பூர்வமான பதிவு எதுவும் இல்லை.
பரவிய செய்தி
"நம்மால் நம்ப முடியாத ஒருவரிடம் சாவியை ஒப்படைக்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் இதற்கு முன்பு ஸ்டாலின் தலைமையில் தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை
இன்று முதல்வர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது. மக்களுக்காக என்ற ஒவ்வொரு ரூபாயும் பொறுப்புடனும் வெளிப்படைத்துடனும் செலவிடப்படும் என்பதே நம்பிக்கை.
அதனால்தான் தமிழகத்தின் நிதியை விஜய் கையில் ஒப்படைத்து மாநில வளர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் துணை நிற்க தயார்."
— நிர்மலா சீத்தாராமன்

விரிவான விளக்கம்
"விக்னேஷ் புகழ" என்ற பேஸ்புக் பயனர் பகிர்ந்த ஒரு பதிவு, தற்போது முகநூலில் பரவலாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தற்போதைய முதலமைச்சர் விஜய் ஆகியோரின் படத்தொகுப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது: "நம்மால் நம்ப முடியாத ஒருவரிடம் சாவியை ஒப்படைக்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் இதற்கு முன்பு ஸ்டாலின் தலைமையில் தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை இன்று முதல்வர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது. மக்களுக்காக என்ற ஒவ்வொரு ரூபாயும் பொறுப்புடனும் வெளிப்படைத்துடனும் செலவிடப்படும் என்பதே நம்பிக்கை. அதனால்தான் தமிழகத்தின் நிதியை விஜய் கையில் ஒப்படைத்து மாநில வளர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் துணை நிற்க தயார்" என்று அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
வைரலாகப் பரவி வரும் இந்தக் கூற்று குறித்து தேடினோம். தமிழகத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் மாநிலத் தலைமை குறித்து ஒன்றிய நிதியமைச்சர் ஆற்றிய சமீபத்திய உரைகள், நேர்காணல்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்தோம். எங்கள் ஆய்வின்படி, மு.க. ஸ்டாலின் அல்லது முதலமைச்சர் விஜய் குறித்து நிர்மலா சீதாராமன் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை, உரை, பத்திரிக்கை வெளியீடு அல்லது நேர்காணல் என எதுவுமே இல்லை. இதிலிருந்து இந்தக் கூற்று முற்றிலும் புனையப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாநில நிதி ஒதுக்கீடு குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது The New Indian Express ஊடகத்தில் “Not hostile to TN while giving funds: Minister Nirmala Sitharaman” என்ற தலைப்பில் ஜனவரி 05, 2024 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதியை நிதிக் குழுவே தீர்மானிக்கிறது என்றும், இந்தத் தொகை மாதந்தோறும் விடுவிக்கப்படுகிறது என்றும், சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே பணம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நிதிப் பங்கீடு என்பது தனிப்பட்ட முதலமைச்சர்கள் மீதான தனிப்பட்ட நம்பிக்கையால் அல்ல, மாறாக அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், மாநிலங்களவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பேசியபோது, அரசு நிதிகள் என்பவை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடின உழைப்பால் ஈட்டிய பங்களிப்புகள் என்றும், அவை இலவசமாகப் பெறப்பட்ட பணக் குவியல் அல்ல என்றும் அவர் பேசியிருந்தார். அரசியல் கோரிக்கைகளுக்காகப் பணத்தை வீணடிக்க அரசு மறுக்கிறது என்று அவர் உறுதியாகத் தெளிவுபடுத்தியதோடு, மிகவும் வெளிப்படையான ஒரு செயல்முறை உள்ளது, நாங்கள் அதன்படியே செயல்படுகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் முதலமைச்சர் மீதான "நம்பிக்கையின்" அடிப்படையில் நிதிகள் வழங்கப்படுகின்றன என்று கூறும் போலியான கருத்துகளுக்கு நேர் முரணாக இருப்பதை பார்க்கமுடிகிறது.
முடிவு:
நம்பிக்கையின்மையின் காரணமாக மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகத்திற்கு நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், விஜய் மீது நம்பிக்கை இருப்பதால் ஒன்றிய அரசு இப்போது நிதியை வழங்கத் தயாராக உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் கூற்று போலியானது. அத்தகைய ஒரு கூற்றுக்கு அதிகாரப்பூர்வமான பதிவு எதுவும் இல்லை.