யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அன்வர் ராஜாவின் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அப்போது, 2017ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் அதில் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து தமிழ்நாடு புறப்படுவதற்கு முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷாவுடன் அரசியல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ், "தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் உள்ளதாகவும், கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்" எனவும் கூறினார். இது பலதரப்பட்ட அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பாஜக - அதிமுக கூட்டணியின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ’எடப்பாடி பழனிசாமி அதிமுக கொள்கையிலிருந்து விலகிச் செல்வதாகவும், அதனால் அதிமுகவில் இனியும் இணைந்து பயணிக்க முடியும் என்று தோன்றவில்லை’ என்றும் அதிமுகவைச் சேர்ந்த மூத்த பிரமுகர் அன்வர் ராஜா குறிப்பிட்டதாக புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் பெயரில் News Card ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைச்சப்போலாம் பொத்திட்டு இருந்துட்டு இப்ப என்ன சொரணை வந்தா மாதிரி பேசுறீங்க அன்வர் ராஜா !! pic.twitter.com/mu9XXgNxj3
உண்மை என்ன ?
பரப்பப்படும் News Card-ல் தேதி 26/03/2025 என்றும் நேரம் காலை 10:30 மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்துத் தேடினோம். அதில் இதுபோன்ற NewsCard ஏதும் பதிவிடப்பட்டிருக்கவில்லை. மாறாக, 26/03/2025 அன்று காலை 10:30 மணி அளவில் அமித்ஷா, இபிஎஸ் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம், எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தது பற்றி தான் News Card பதிவிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஊடகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர்.
இதையடுத்து அன்வர் ராஜாவின் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அப்போது, 2017ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் அதில் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் keywords கொண்டு இணையத்தில் தேடிய போதும், அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு குறித்து அன்வர் ராஜா கூறியதாக எந்தவொரு செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவரான கெளரி சங்கர் இது திமுகவினர் பரப்பும் பொய் செய்தி என்ற ரீதியில் ஒரு பதிவினை தனது X பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
200 ரூபாய்க்காக திமுக கொத்தடிமைகள் பரப்பும் பொய் செய்திகளை நம்பாதீர்! pic.twitter.com/9XFSm1gsl7
மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த NewsCard போலியானது என்பதை உறுதியாகிறது.
முடிவு :
நம் தேடலின் முடிவாக, அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா கருத்து தெரிவித்ததாக பரப்பப்படும் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் NewsCard போலியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
