யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆந்திராவில் நடந்த சம்பவத்தை "தமிழ்நாட்டில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைக் கட்டி வைத்த கும்பல்" என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்...
@tn_factcheck எந்த ஊர் என்று கண்டுபிடித்து சொல்லு... #திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும் #ADMK_TNJ

விரிவான விளக்கம்
கணவன் வாங்கிய கடனுக்காக இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கொடுமை என்று 1 நிமிடம் 2 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, சுற்றி இருக்கும் பெண்கள் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கந்து வட்டி கொடுமையா????
கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்...@tn_factcheck எந்த ஊர் என்று கண்டுபிடித்து சொல்லு...#திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும் #ADMK_TNJ pic.twitter.com/UbVTNWVmRY
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ”Woman tied to tree, assaulted over loan repayment in AP's Chittoor; CM Naidu orders strict action” என்ற தலைப்பில் New Indian Express ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை பார்க்க முடிந்தது. அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திம்மராயப்பா என்ற நபர் வாங்கிய கடனுக்காக அவரது மனைவி சிரிஷா என்பவரை மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர் என்றும், சம்பவத்தை தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற கிராம மக்களையும் அவர்கள் தாக்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஆந்திர மாநில காவல்துறை கைது செய்துள்ளது என்றும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும் உறுதியளித்துள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையையும், அவரது குழந்தைகளின் கல்விக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும் இது குறித்து தேடிய போது புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் கணவன் வாங்கிய ரூ. 80 ஆயிரம் பணத்தை வட்டியுடன் உடனடியாக திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று அவரது மனைவியை முனிகண்ணப்பா என்ற நபர் மரத்தில் கட்டி வைத்து மிரட்டியதாகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து NDTV, நக்கீரன், விகடன் போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு:
ஆந்திராவில் நடந்த சம்பவத்தை "தமிழ்நாட்டில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைக் கட்டி வைத்த கும்பல்" என்று கூறி அதிமுகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.