யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2010-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவந்த தாலிபான் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியின் புகைப்படம் இது. இதை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
N.I.A வால் டெல்லியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீங்களும் நானும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, தோவல் ஜி தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் இலக்கின்றி சுற்றித் திரியவில்லை. டெல்லி மற்றும் உ.பி. போலீசாரின் உதவியுடன் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) நேற்று இரவு டெல்லியில் உள்ள சீலம்பூர் மற்றும் உ.பி.யில் உள்ள அம்ரோஹாவில் சோதனை நடத்தி 16 பேரை கைது செய்தது...
இவர்களில் ஒரு பொறியியல் மாணவர்,
அம்ரோஹா மசூதியின் மௌல்வி,
ஒரு பல்கலைக்கழக மாணவர்,
பல வெல்டர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடங்குவர்...
இந்த சோதனையில், டெல்லியின் சீலம்பூரில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டது, 25 கிலோ வெடிபொருட்கள், 150 தொலைபேசிகள், 300 சிம் கார்டுகள், 200 அலாரம் கடிகாரங்கள், மெல்லிய இரும்பு குழாய்கள் மற்றும் டன் கணக்கில் ஆணிகள் மற்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன...

விரிவான விளக்கம்
வெடிபொருட்கள் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு நபரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவில் டெல்லியின் சீலம்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில், தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனை நடத்தி 16 நபர்களைக் கைது செய்தனர் என்றும், ஒரு ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடிபொருட்கள், 150 தொலைப்பேசிகள், 300 சிம் கார்டுகள்,அலாரம் கடிகாரங்கள், மெல்லிய இரும்பு குழாய்கள் மற்றும் டன் கணக்கில் ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.
बीती रात NIA ने दिल्ली के सीलमपुर और यूपी के अमरोहा में छापेमारी की और 16 लोगों को गिरफ्तार किया...
फिआदीन सुसाइट बॉम्बर की एक झलक। pic.twitter.com/Qw6tq9ZftU
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது mehr news என்ற இணையதளப்பக்கத்தில் அந்த நபர் குறித்து நவம்பர் 6, 2010 அன்று ”Suicide bomber arrested in Afghanistan/Photo of the bombed person” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ஆப்கானிஸ்தானில் உள்ள Farah மாகாணத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை தாக்குதலைத் திட்டமிட்ட ஒருவரைக் கைது செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் உயர் பதிவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராகத் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவர் தாலிபான் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

அதே போல் Barchin News என்ற இணையதள பக்கத்திலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடையவர் என்றும், தற்கொலை குண்டுதாரி யாரைக் குறிவைத்தார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து சமீபத்தில் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் NIA ஏதேனும் சோதனைகளை நடத்தி தற்கொலை குண்டு தாரிகளையோ அல்லது பயங்கரவாதிகளையோ கைது செய்ததா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது சோதனை நடத்தியதற்கான எந்த அறிக்கையும், செய்தியும் பார்க்க முடியவில்லை.
மாறாக டிசம்பர் 2018ல், THE INDIAN EXPRESS ஊடகத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. அதில் NIA, டெல்லி காவல்துறையினர் மற்றும் உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் 17 இடங்களில் சோதனைகளை நடத்தியது என்றும், ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்புடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் டிசம்பர் 26, 2018 அன்று NIA வெளியிட்ட அறிக்கை ஒன்றைக் காணமுடிந்தது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் ஈர்க்கப்பட்ட ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பின் மீது நடத்தப்பட்ட பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 17 இடங்களில் NIA சோதனைகளை நடத்தியது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அக்குழுவின் பின்னணியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட முஃப்தி முகமது சுஹைல் மற்றும் 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களிடமிருந்து கணிசமான அளவு வெடிபொருட்கள், துப்பாக்கள், ஒரு ராக்கெட் லாஞ்சர், ரூ.7.5 லட்சம் ரொக்கம் போன்றவற்றைப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், பரவி வரும் புகைப்படம் 2010-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவந்த தாலிபான் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியின் புகைப்படமாகும். மேலும் 2018ஆம் ஆண்டு டெல்லி மற்றும் உத்திர பிரதேசத்தில் NIA நடத்திய சோதனையை, தற்போது நடந்தது போல் பரப்புகின்றனர்.