யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்-ன் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் தொகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பரவிய செய்தி
பனையூர்சட்டமன்ற தொகுதி கிடையாது . அது சோளிங்க நல்லூர் தொகுதி! நூற்றுகணக்கான விண்ணப்பங்கள் பனையூர் தொகுதி என கொடுத்திருக்கிறார்கள்! இவர்களை தற்குறி என சொல்லாமல் என்ன சொல்வது?

விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கி உள்ளது. அப்போது அக்கட்சியின் தலைவர் விஜய் பெயரில் விருப்ப மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் தொகுதியின் பெயர் என்று பனையூர் என்று வழங்கப்பட்டதாகவும், பனையூர் சட்டமன்ற தொகுதி கிடையாது, அது சோளிங்கநல்லூர் தொகுதி என்றும், நூற்றுகணக்கான விண்ணப்பங்கள் பனையூர் தொகுதி என கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு ஊடகவியலாளர் தாமோதரன் பிரகாஷ் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பனையூர்சட்டமன்ற தொகுதி கிடையாது . அது சோளிங்க நல்லூர் தொகுதி! நூற்றுகணக்கான விண்ணப்பங்கள் பனையூர் தொகுதி என கொடுத்திருக்கிறார்கள்! இவர்களை தற்குறி என சொல்லாமல் என்ன சொல்வது? pic.twitter.com/SeK7EPrOtO
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ”தவெகவில் இன்று முதல் விருப்ப மனு தாக்கல்” என்று தலைப்பில் பாலிமர் ஊடகத்தில் அதன் லைவ் வீடியோ பிப்ரவரி 6 அன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில், சரியாக 2 மணி நேரம் 20 நிமிடம் 46 விநாடிகளில், தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்-ன் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில், விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் தொகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து மேலும் தேடிய போது, தவெக கட்சியின் விருப்பமனு தாக்கல் குறித்து தினமலர் ஊடகத்தில் பரவி வரும் புகைப்படத்துடன் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதிலும் விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்து. இதன் மூலம் அந்த புகைப்படத்தை Edit செய்து, தொகுதி என்ற இடத்தில் ‘பனையூர்’ என்று எழுதிருப்பதாக போலியான படத்தை உருவாக்கியுள்ளனர் என்பதை உறுதி செய்யமுடிந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையான புகைப்படத்தில் விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தொகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, பரவி வரும் புகைப்படத்தில் தொகுதி என்ற இடத்தில் ‘பனையூர்’ என்று எடிட் செய்து பரப்பப்படுவது உறுதியானது.