யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தால் சாலைகள் அடைக்கப்பட்டதால் CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படும் காட்சி” எனப் பரவும் புகைப்படம் போலியானது. இரு வேறு புகைப்படங்களை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். மேலும் உத்தரகாசி காவல்துறையினரும் பரவி வரும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்துள்ளனர்.
பரவிய செய்தி
ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் இருந்து எடுக்க முடியவில்லை, எனவே "முழு ஜேசிபி ஆம் முழு ஜேசிபி" சினூக் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது மாறிவரும் இந்தியா, புதிய இந்தியா, வலுவான இந்தியா மற்றும் நவீன இந்தியா...
வாழ்க இந்தியா!.

விரிவான விளக்கம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தாராலி பகுதியில் ஆகஸ்ட் 5 திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் இருந்து எடுக்க முடியாததால், ஜேசிபியை சினூக் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Rediff ஊடகப்பக்கத்தில், அக்டோபர் 8, 2020 அன்று வெளியான ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் விமானப்படை தின சிறப்பு நிகழ்ச்சியாக, இந்திய விமானப்படையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய Air Commodore நிதின் சாத்தே, அதிலிருந்து கற்றுக்கொண்டவற்றை குறித்து கூறிய தொகுப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அந்த தொகுப்பில் பரவி வரும் புகைப்படத்தின், உண்மையான படம் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது. அதில் சினூக் ரக ஹெலிகாப்டரில் ஹவிட்ஸர் ரக துப்பாக்கி எடுத்து செல்லும் படம் என்று குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து மேலும் தேடிய போது, Hindustan times ஊடகப்பக்கத்தில், “‘Heard a deafening sound’: Witnesses recall the Dharali horror in Uttarakhand” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகியிருந்த செய்தியை பார்க்கமுடிந்தது. அந்த செய்தியில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும், மற்றொரு புகைப்படம்(உத்தரகாண்டின் தாராளி பகுதியின் படம்) இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

இவ்விரு படங்களை இணைத்து, ஹவிட்ஸர் துப்பாக்கிக்கு பதிலாக JCB எந்திரத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருவதை உறுதி செய்யமுடிந்தது.

மேலும் தேடிய போது, உத்தரகாசி காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 8 அன்று வெளியான பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ஜேசிபியை தூக்கிச் செல்லும் புகைப்படம், முற்றிலும் போலியானது என்பதை உறுதி செய்துள்ளனர்.
#FactCheck
कुछ लोगों द्वारा चिनूक द्वारा उठाई JCB की उक्त तस्वीर को उत्तरकाशी के हर्षिल, धराली आपदा रेस्क्यू से जोड़ा जा रहा है, जोकि पूर्णतः असत्य एवं भ्रामक है। pic.twitter.com/og632zQJS3
முடிவு:
நம் தேடலில் “உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தால் சாலைகள் அடைக்கப்பட்டதால் CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படும் காட்சி” எனப் பரவும் புகைப்படம் போலியானது. இரு வேறு புகைப்படங்களை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.