யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ, 2021ஆம் ஆண்டு காஷ்மீரின் கோகர்நாக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் தங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்ததாகும்.
பரவிய செய்தி
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அமைதி மார்க்கத்தினரின் வீடுகள் எல்லாம் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக பல துறைகளில் இருக்கிறார்கள் கொஞ்சம் இந்த பக்கமும் வாருங்கள் மோடி ஜி

விரிவான விளக்கம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நாடுமுழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் எல்லாம் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதாக 30 நொடிகள் காணொளி ஒன்று பரப்பப்படுகிறது.
_தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அமைதி மார்க்கத்தினரின் வீடுகள் எல்லாம் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது...🔥_
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக பல துறைகளில் இருக்கிறார்கள் கொஞ்சம் இந்த பக்கமும் வாருங்கள் மோடி ஜி 🔥🙏🏻🚩 pic.twitter.com/4caAa7k0lz
உண்மை என்ன ?
பரவி வரும் காணொளியை ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Excelsior News என்ற காஷ்மீர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், 12 May 2021 அன்று Kokernag Encounter: Militants Made Abortive Bid To Escape Before Being Killed என்ற தலைப்பில் பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து keywords மூலம் இந்த செய்தி குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது 11 May 2021 அன்று Times Of India, '3 local LeT terrorists killed in Kokernag encounter: Police' என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் உள்ள வைலூ கிராமத்தில் நடந்த மோதலில் மூன்று உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இது குறித்து 11 May 2021 அன்று INDIA TODAY வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய மூன்று தீவிரவாதிகள் சிக்கிக் கொண்டு, பின்னர் கொல்லப்பட்டதைப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியதாகவும், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவத்தின் 19 ஆர்ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் The Hindu, Gulf Today போன்ற ஊடகங்களும், காஷ்மீரில் நடந்த மோதலில் 3 எல்.இ.டி தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டுள்ளதைக் காணமுடிந்தது.

மேலும் மே 11, 2021 அன்று Kashmir Zone Police-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட பதிவு ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதில் அனந்த்நாக்கில் இந்தியப் படைகளால் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#AnantnagEncounterUpdate: 02 more #terrorists killed (total 03). Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/v1fcHJp3GX
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 5 தீவிரவாதிகளின் வீடுகளை தகர்த்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் வைரலாகும் இந்த காணொளி 2021 ஆண்டில் கோக்கர்நாக்கில் இந்தியப் படைகள் நடத்திய என்கவுண்டரின் காட்சிகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
முடிவு :
நம் தேடலில் வைரலாகும் காணொளி, சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுடன் எந்த வகையில் தொடர்புடையது அல்ல என்பது தெளிவாகிறது. இது மே மாதம் 2021 ஆண்டில் கோக்கர்நாக்கில் இந்தியப் படைகள் நடத்திய என்கவுண்டரின் காட்சிகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.