யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
டெல்லியில் கரப்பான் பூச்சி நடத்தும் போராட்டத்தில் உள்ளே புகுந்து வாகனங்களுக்கு தீ வைக்க முயலும் முஸ்லிம்கள்

விரிவான விளக்கம்
இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தொடக்கத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஒருங்கிணைத்து நடத்தினாலும் தற்போது பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு போராடி வருகிறார்கள். ஜூலை 20ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பேரணி செல்ல முயற்சித்த போது அவர்கள் மீது டெல்லி போலீஸார் மற்றும் துணை இராணுவப்படைகள் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் போலீஸ் தடுப்பதையும் மீறி வாகனத்திற்கு முஸ்லிம் ஒருவர் தீ வைக்க முயற்சிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முஸ்லிம்கள் இவ்வாறு வாகனத்திற்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக பரப்பி வருகிறார்கள்.
டெல்லியில் கரப்பான் பூச்சி நடத்தும் போராட்டத்தில் உள்ளே புகுந்து வாகனங்களுக்கு தீ வைக்க முயலும் ஜிகாதி கும்பல்.. pic.twitter.com/YBx1cIjMeM
காவல் துறை தடுத்தும் அதை மீறி
ஒரு இஸ்லாமியன் போலீஸ் வேன் க்கு தீ வைத்து எரிகிறான், இவனுக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்
இதே நேரம் டெல்லி யோகி கையில் இருந்திருந்தால் அவன் வீடு இடிக்க பட்டு இருக்கும் அவனும் பரலோகம் போயிருப்பான்... pic.twitter.com/gk5qoAVLz2
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Key frame-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Money Control’ என்ற செய்தித்தளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.
கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ‘பீகார் மாநிலத்தில் சாலை விபத்து ஏற்படுத்திய கார் ஒன்றை அங்கிருந்து மக்கள் தீ வைத்து எரிக்க முயன்றதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் ‘CNN News 18’ செய்தி ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 17ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. அதிலும் ‘பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக் காரை மக்கள் தீ வைத்து எரிக்க முயன்றதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்த வீடியோவில் உள்ள சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்தது என்பதும் இதற்கும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வருகிறது.
முடிவு:
பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து காருக்கு மக்கள் தீ வைத்து எரிக்க முயன்ற வீடியோவை, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முஸ்லிம்கள் காருக்கு தீ வைக்க முயன்றதாக திரித்துப்பட்ட தவறான தகவலை மதவாத நோக்கில் பரப்பி வருகிறார்கள்.