யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லாதபோது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
முன்னாள் இந்தியப் பிரதமரும் முன்னாள் சீன அதிபரும்... இந்த வீடியோவை நீங்களும் தேடினீர்களா... பாவம் சிங் சார்..
விரிவான விளக்கம்
கார் ஒன்றிலிருந்து வெளிநாட்டு அதிகாரி ஒருவர் இறங்கி, முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும் பின்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனும் கை குலுக்கிறார். புகைப்படம் எடுக்கும் போது மற்ற வெளிநாட்டு அதிகாரிகளும் உடன் நிற்க, அவர் சோனியா காந்தியின் அருகில் கை குலுக்கிய படி நிற்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவ்வாறு தான் சீன அதிபரால் முக்கியத்துவம் இல்லாமல் நடத்தப்பட்டார். அவருக்கு ஆளுமையே இல்லை’ என்று பொருள்படும் படியாக பாஜக ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.
பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்...
இந்த வீடியோ தானே தேடிகிட்டு இருந்தீங்க நீங்க... 🤣🤣🤣
இந்தாங்க சங்கிகளே உங்களுக்கு.. ❤️ pic.twitter.com/qF864KnkkM
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவை keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவைக் காணமுடிந்தது. 2015ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்தப் பதிவில், பரப்பப்படும் வீடியோவுடன் ஒத்துப்போகக்கூடிய புகைப்படங்களைக் காண்கிறோம். மேலும் அதில், ‘சீனாவின் நாடாளுமன்ற தூதுக்குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
A Chinese Parliamentary Delegation called on Congress President Smt.Sonia Gandhi and Former PM Dr. Manmohan Singh pic.twitter.com/UeFeu2YatJ
அதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் மேலும் தேடுகையில், ‘Zee News’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. ஜூன் 16, 2015 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாங் டெஜியாங் தலைமையிலான நாடாளுமன்ற தூதுக்குழு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புது டெல்லியில் சந்தித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. அப்போது மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லை. நரேந்திர மோடி தான் பிரதமராக இருந்தார். மேலும், இந்த வீடியோவில் இருப்பது அப்போதைய சீன அதிபர் அல்ல, சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாங் டெஜியாங் என்பதும் தெரிய வருகிறது.
முடிவு:
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, ‘பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங் சீனா அதிபரால் முக்கியத்துவம் இல்லாமல் நடத்தப்பட்டதாக’ திரித்துப் பரப்புகிறார்கள்.