யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2020ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடத்தப் பயங்கரவாதிகள் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது நடந்த பஹல்கம் தாக்குதலுடன் தொடர்புப்படுத்திப் பொய் செய்தி பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
இதற்கான தண்டனை கொடுரமாக இருக்கும்.. காஸ்மீர் சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை குழந்தை கண் முன்னால் சுட்டு கொன்று இருக்கானுங்க... அந்த குழந்தை சொல்கிறது உன் தந்தை எந்த மதம் என்று கேட்டார்கள்.. ஹிந்து என்றதும் சுட்டு கொன்றார்களாம்..

விரிவான விளக்கம்
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்குள் நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 26 பேர் பலியாகினர். தமிழகம், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் உள்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலின் போது, குழந்தையின் கண் முன்னால் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தந்தை இந்து மதம் என்றதும் சுட்டுக் கொன்றார்கள் எனவும் காணொளி ஒன்று பரவி வருகிறது.
Heart Breaking. 💔
This kid is a Hindu, That's the Only mistake of him. Such a cruelty 💔🥹#PahalgamTerroristAttack | #Pahalgam pic.twitter.com/V2kMWxohaN
உண்மை என்ன ?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ɪɴɴᴏᴄᴇɴᴛ ᴋᴀsʜᴍɪʀ என்ற முகநூல் பக்கத்தில் ஜூலை 2, 2020ஆம் ஆண்டு பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அதில் காஷ்மீரில் நடந்த தாக்குதலின் போது உயிரிழந்த தனது தாத்தாவின் மீது 3 வயதுக் குழந்தை அமர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி குறித்துத் தேடிய போது, Al jazeera செய்தி ஊடகத்தில் ஜூலை 2, 2020அன்று Photo of toddler sitting on his grandfather’s body angers Kashmir என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் காஷ்மீரின் சோப்பூர் நகரில் மூன்று வயது குழந்தை ஒன்று தனது தாத்தாவின் இறந்த உடலின் மீது அமர்ந்திருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் கோபத்தைத் தூண்டியுள்ளது என்றும், துப்பாக்கிச் சண்டையின் போது 65 வயது முதியவரைப் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தேடுகையில், A 3-year-old child sat on his relative's chest during the terrorist attack, an army soldier saved him என்ற தலைப்பில் apb news இணையதள பக்கத்தில், ஜூலை 1, 2020 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடத்தப் பயங்கரவாதிகள் தாக்குதலின் போது, இறந்த உடலின் மீது ஒரு குழந்தை அமைதியாக அமர்ந்திருந்தது. உடனடியாக ராணுவ வீரர் குழந்தையை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்யத் தேடிய போது, Kashmir Zone Police-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ஜூலை 1, 2020 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
JKP #rescued a three years old boy from getting hit by bullets during #terrorist #attack in #Sopore. @JmuKmrPolice pic.twitter.com/hzqGGvG7yN
அதே போல் Deccanherald, India Today போன்ற ஊடகங்களும், இது குறித்து செய்தி வெளியிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
முடிவு :
அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, குழந்தையின் கண் முன்னால் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ தவறானது.