யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2025 திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் விஜய், கடந்த மே 14ஆம் தேதி பருத்தி இறக்குமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்படும் வரி காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் பாதிக்கப்படுவதால், அந்த வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும், அதனைத் தொடர்ந்து மே 30ஆம் தேதி பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்ததாகவும் News Card ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினால் முடியாத இந்த காரியத்தை தற்போதைய முதல்வர் விஜய் சாதித்து காட்டியிருப்பதாகவும் இந்த News Card-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த News Card-ஐ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்.
எதும் உள்குத்து இல்லாத வரை சந்தோஷம் pic.twitter.com/GKzJcSMR8D
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த தகவல் குறித்த செய்திகளை தேடினோம். பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்லி முதல்வர் விஜய் மே 14ஆம் தேதி கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, மே 30ஆம் தேதி ஒன்றிய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதாக சொல்லப்படும் தகவல் உண்மை தான். வரி ரத்து செய்யப்படும் இந்த நடைமுறை ஜூன் 1ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31 வரை அமலில் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதேபோல் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
With US tariffs rising from 25% to a possible 50%, Tamil Nadu will be hit harder than most states as our exports are deeply tied to the US market. Lakhs of jobs in textiles, leather, auto, machinery and other sectors are at risk.
I have urged the Hon’ble PM Thiru. @NarendraModi… pic.twitter.com/WWPntAOluc
திமுக ஆட்சியில் இருக்கும்போது 2025 ஆகஸ்ட் மாதம், இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்க அரசு சுமத்தியதால் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்லி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, 19 ஆகஸ்ட் 2025 முதல் 30 செப்டம்பர் 2025 வரையில் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து, தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி பருத்திக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்வது இது முதல்முறையல்ல என்பது தெரியவருகிறது.
முடிவு:
விஜய் கடிதம் எழுதி தான் முதன்முறையாக பருத்திக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ததாக தவறான தகவலை பரப்புகிறார்கள்.
