யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆலப்புழாவில் கோவில் திருவிழா ஒன்றில், இரவு 10 மணிக்குப் பிறகு அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடந்ததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை தடை செய்த இஸ்லாமியர்கள் எனக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக தவறான செய்திகளை பலரும் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
Muslims in kerala stopped classical Music Concert.._with 20% population this community dares to stop Hindu Programs. நாட்ல துலுக்கர்கள் அதிகமானால் இப்படித்தான் நடக்கும். விழிப்புணர்வு தேவை இந்து சொந்தங்களே..

விரிவான விளக்கம்
கேரளாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, ஒரு சிறுமி வயலின் வாசிப்பதை நிறுத்தும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தான் நிறுத்தியதாக சமூகவலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
Jihadists forcefully shut down cultural program in Kerala
Because there were musical instruments being played there. pic.twitter.com/2vYdq3izsc
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் மலையாள ஊடகமான மனோரமா நியூஸின் லோகோ இடம்பெற்றிருப்பதை காணமுடிந்தது. இதை வைத்து அந்த ஊடகத்தில் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது மார்ச் 5, 2025 அன்று மனோரமா செய்தி ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் "ஆலப்புழாவில் உள்ள கோட்டம்குளங்கர கோவிலில் நடைபெற்ற கங்கா சசிதரனின் வயலின் இசை நிகழ்ச்சியை இரவு 10 மணிக்கு நிறுத்துமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடுகையில், அதே மனோரமா செய்தி ஊடகத்தில் மார்ச் 9, 2025 அன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆலப்புழாவில் உள்ள கொட்டாங்குளங்கர கோவிலில் 10 வயது சிறுமி கங்காசசிதரனின் வயலின் இசை நிகழ்ச்சியை வலுக்கட்டாயமாக நிறுத்திய காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக பரவலான போராட்டங்கள் வெடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த செய்தியில் ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி, அந்த 10 வயது சிறுமியை அழைத்து வயலின் வாசிக்க வைத்து கைதட்டி ஊக்குவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து கேரள காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் "கேரளாவில், இரவு 10:00 முதல் அதிகாலை 06:00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் பொது நிகழ்ச்சிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், ஆலப்புழாவில் கோவில் திருவிழா ஒன்றில், இரவு 10 மணிக்குப் பிறகு அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடந்ததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். இதை கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை தடை செய்த இஸ்லாமியர்கள் எனக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக பாஜகவினர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.