யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024ல் மக்களவையில், நிதி மசோதா ஒன்றின் மீது நடைபெற்ற விவாதத்தில், ஓவைசி தனது கண் கண்ணாடியை கழற்றிவிட்டு, நெற்றி மற்றும் கண்களை துடைத்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது அவர் கண் கலங்க்குவதாகக் கூறி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி. இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார். இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. குட் ஷாட்!!!
விரிவான விளக்கம்
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம் உள்ளிட்ட பல திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்ட வடிவம் பெற்றது. இதற்கு முஸ்லிம் அமைப்புகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது ரூ.3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களைக் கொண்ட அசாதுதீன் ஓவைசி எம்பி கண் கலங்குவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2024 ஆகஸ்ட் 7 அன்று மக்களவையில், நிதி மசோதா ஒன்றின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பதை அறிய முடிந்தது.
சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில், “எல்.எஸ் | ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ் பேசியுள்ள கருத்துக்கள் | நிதி மசோதா, 2024 | ஆகஸ்ட் 07, 2024” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சரியாக 4:33 வது நிமிடத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது.
இதன் முழு வீடியோவில், ஓவைசி தனது கண் கண்ணாடியை கழற்றிவிட்டு, நெற்றி மற்றும் கண்களை துடைத்துக்கொண்டு அடுத்து பேசுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதையே காண முடிகிறது.
மேலும் ஏப்ரல் 02 அன்று மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதத்தில் அவர் பேசியுள்ள வீடியோவையும் நாம் ஆய்வு செய்தோம். அதில் ஓவைசி வேறு ஆடை அணிந்திருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
இதன் மூலம், கடந்த 2024ல் மக்களவையில், நிதி மசோதா ஒன்றின் மீது நடைபெற்ற விவாதத்தில், ஓவைசி தனது கண் கண்ணாடியை கழற்றிவிட்டு, நெற்றி மற்றும் கண்களை துடைத்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது அவர் கண் கலங்கியதாகக் கூறி தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வக்ஃப் திருத்த மசோதா விவாதத்தின் போது கண் கலங்கிய எம்பி ஓவைசி என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.