யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது உண்மைதான் என்று மிசா கைதிகளின் நிலையை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷனில் பங்கேற்ற ஒய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு 2019ஆம் ஆண்டே விளக்கமளித்துள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மிசா வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு ஒரு வழக்கில் தான் கைது செய்யப்பட்டார் என்றும் பரப்பப்படுகிறது. அதே போல் எமர்ஜென்சி அறிவித்ததும் திமுக இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது என்றும், திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகே அவர்கள் எமர்ஜென்சியை எதிர்த்தார்கள் என்றும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முதலில் மிசா வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும் பரவும் தகவல் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது 18 நவம்பர், 2019 அன்று News18 Tamil Nadu ஊடகத்தில் மிசா கைதிகளின் நிலையை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷனில் பங்கேற்ற ஒய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு அளித்த பேட்டியை பார்க்கமுடிந்தது.
சரியாக 0:41 விநாடியில் இது குறித்து விளக்கமளிக்கிறார். அதில் மிசா சட்டத்தில் திமுகவில் இருந்து கைது செய்யப்பட்டவர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 450 பேர். முக்கியமான தலைவர்களான முரசொலி மாறன், சிட்டி பாபு எம்.பி, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்திருந்தார்.
அதே போல் அதே போல் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் ஸ்டாலின் அடைக்கப்பட்டதாகவும், அங்கு கொடூர தாக்குதல் நடைபெற்றதாகவும் 26 ஜூன், 2025 அன்று News18 Tamil Nadu ஊடகத்திற்கு தோழர் தியாகு விளக்கமளித்திருந்ததையும் பார்க்கமுடிந்தது. இதிலிருந்து மிசா சட்டத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது உறுதியானது.
இதையடுத்து எமர்ஜென்சி அறிவித்ததும் திமுக இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது என்றும், திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகே அவர்கள் எமர்ஜென்சியை எதிர்த்தார்கள் என்று பரவி வரும் தகவல் குறித்து தேடினோம். அப்போது 17 ஜூன், 2023 அன்று Youturn தரப்பில் இது குறித்து கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் 1975, ஜூன் 27ம் தேதியே எமர்ஜென்சி ஒரு சர்வாதிகார பேரிருள் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை அறிய முடிந்தது. அந்த கட்டுரையை கீழ் இணைக்கிறோம், படித்து பாருங்கள்.
1976ல் ஆட்சிக் கலைக்கப்பட்ட பிறகே திமுக எமர்ஜென்சியை எதிர்த்ததாக மாரிதாஸ் சொன்ன பொய் !
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதுசெய்யப்படவில்லை என்று பரவும் தகவல் தவறானவை. மிசா சட்டத்தில் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் ஸ்டாலின் அடைக்கப்பட்டதும், அங்கு கொடூர தாக்குதல் நடைபெற்றதும் உண்மை தான்.
