யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த புகலிடம் அமைத்து தருமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லியில் பசுமாடுகள் சாலையில் செல்வதால் வாகனங்கள் யாரும் அதை தொந்தரவு செய்யக்கூடாது, அதை கடந்து செல்லக்கூடாது என்று டெல்லி மாநில முதலமைச்சர் ஆணையிட்டார். பைத்தியக்காரனுங்க கையில ஆட்சிய கொடுத்தா இப்படித்தான் இருக்கும்..
விரிவான விளக்கம்
பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லியில் பசுமாடுகள் சாலையில் செல்வதால் வாகனங்கள் யாரும் அதை தொந்தரவு செய்யக்கூடாது என்று டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தா ஆணையிட்டதாகக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ANI பரவி வரும் இதே வீடியோவைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், “ஷாலிமார் பாக்: ஹைதர்பூர் மேம்பாலத்தில் காணப்படும் கால்நடைகளுக்கு சரியான தங்குமிடம் கொடுக்குமாறு டெல்லி முதல்வர் ரேகா குப்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். (ஆதாரம் - டெல்லி CMO)“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே இது குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்தோம். கடந்த மார்ச் 26, 2025 அன்று பரவி வரும் இதே வீடியோவைக் குறிப்பிட்டு அவர் பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.
அதில், “இன்று ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள ஹைதர்பூர் மேம்பாலத்தில் காணப்படும் பசுவிற்கு சரியான தங்குமிடம் உறுதி செய்ய நான் அறிவுறுத்தல்களை வழங்கினேன். பசு பாதுகாப்பு மற்றும் சாலைகளை பாதுகாப்பானதாக்குவதில் எங்கள் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம்,ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த புகலிடம் அமைத்து தருமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், சாலையில் செல்லும் பசுக்களை வாகனங்கள் கடந்து செல்லக்கூடாது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆணையிட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.