யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை. இது தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை!! ஜனாதிபதி திரௌபதி அதிரடி!
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததால் சா்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்திருந்த நிலையில், "மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும். ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும். ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தால், இதுதொடா்பாக மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம்" என கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில் “குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிரடி” என்று குறிப்பிட்டு செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு “குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது உத்தரவு எதுவும் பிறப்பித்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
‘மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின்கீழ் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பி, கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரையும் கோரியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று (ஆக.19) பிற்பகல் 4:00 மணி வரை, உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் இறுதிதீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாதநிலையில், ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.