யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதால் 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி முயற்சியால், எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவதற்கு மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
News Tamil 24×7 ஊடகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவை சேர்ந்த பேச்சாளர் ஒருவர், மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019ல் அடிக்கல் நாட்டி 7 வருடங்கள் ஆகிவிட்டது. ஆன இந்த 7 வருடத்தில் 10 மாநிலங்களில் ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டமுடிந்த ஒன்றிய அரசால், தமிழ்நாட்டில் கட்டமுடியவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு அந்த நிகழ்ச்சியின் நெறியாளர், 2008ஆம் ஆண்டு அப்போதைய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார் செய்தி ஒன்றை தெரிவித்திருந்தார்.
நெறியாளர் கேட்ட ஒரே கேள்வி... உபி ஊ....பிகுனு போயிட்டான்... @MaduraiSBala pic.twitter.com/Z3ahuxECfQ
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் இருந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Press Information Bureau இணையதளப்பக்கத்தில், இதே புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், 2009 பிப்ரவரி 27 அன்று, 'பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா' திட்டத்தின் கீழ் மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையைத் தரம் உயர்த்துவதற்கான அடிக்கல்லை நாட்டினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, ஜூலை 21, 2001 அன்று நாடாளுமன்ற விவாதித்த அறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டிருந்ததை 230 முதல் 268 பக்கத்தில் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. சரியாக 261வது பக்கத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விவாத்திருந்தார்.

அதில், தமிழ்நாட்டில் AIIMS போன்றதொரு நிறுவனம் ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இக்கருத்து, தமிழ்நாடு மாநில அரசின் பட்ஜெட்டிலேயே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனையை AIIMS தரத்திற்கு மேம்படுத்துவதற்கான ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசிடமிருந்து ரூ.150 கோடி தேவைப்படுவதாகவும், அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மாநில அரசு தனது பங்காக ரூ.15 கோடியையும், தேவையான நிலத்தையும் வழங்கத் தயாராக உள்ளது. மத்திய அரசு தனது பங்கை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து தந்தி ஊடகத்தில் 24 ஆகஸ்ட், 2017 அன்று அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியை பார்க்கமுடிந்தது. அதில் அவர், ஒன்றிய அமைச்சராக இருந்தபோது மதுரையில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து AIIMS தரத்திற்கு மருத்துவமனையை கட்ட 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், தான் அதற்கு அடிக்கல் நாட்டியதாகவும், ஆட்சி மாற்றம் வந்து கிடப்பில் போட்டதாகவும் கூறினார்.
முடிவு:
எனவே, 2008ஆம் ஆண்டு அப்போதைய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார் என்று பரவுவது தவறான தகவலாகும்.
