யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
“உணவளிப்பது குற்றமல்ல, உரிமை!”
தெருநாய்களுக்கு உணவு அளிப்பது மனிதத்துவத்தின் அடையாளம்.
இனி உணவளிப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை
உணவளிப்பவர்களின் குரலை வலுப்படுத்தியதற்கு மதிப்பும் மரியாதையும்!

விரிவான விளக்கம்
நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, தெருநாய்களுக்கு உணவு அளிப்பதைத் தடுக்கிறவர்கள் அல்லது உணவளிப்பவர்களைத் தொந்தரவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவளிப்பவர்கள் தங்கள் இடங்களில் அமைதியாக உணவு அளிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த நியூஸ் கார்ட் குறித்து, சன் நியூஸ் ஊடகப்பக்கத்தில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அதில் கடந்த ஆகஸ்ட் 22 அன்று, ”தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது.. - உச்ச நீதிமன்றம்” என்று குறிப்பிட்டு, ஒரு நியூஸ் கார்ட் வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து வேறு ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். சிறப்புப் பகுதிகள் தவிர, தெருக்கள் மற்றும் பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்கிறது என்றே செய்திகள் வெளியாகியிருந்தது.

தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து சன் நியூஸ் ஊடகத்தை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் இந்த நியூஸ் கார்ட் போலியானது என்றும், அதிலுள்ள செய்தியும் உண்மையில்லை எனவும் விளக்கமளித்தனர்.
இதற்கு முன்பும் இதே போல் சமூகவலத்தளங்களில் பரவிய போலி நியூஸ் கார்ட் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க :
ரேஷன் கடைகளிலும் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் போலியான நியுஸ் கார்ட்!
முடிவு:
எனவே, “தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.