யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிறார்கள்.
பரவிய செய்தி
ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் உயிரை இழந்த நமது சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.



விரிவான விளக்கம்
இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 20ஆம் தேதியன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது டெல்லி போலீஸார் மற்றும் துணை இராணுவப்படைகள் மாணவர்கள் மீது கடுமையாக தடியடி நடத்தினர்.
இந்நிலையில் ஒரு இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு, போலீஸாரின் இந்த தடியடி தாக்குதலால் போராட்டக்களத்தில் இந்தப் பெண் இறந்துவிட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் ஆகியோரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
போராட்ட களத்தில்
தன் உயிரை
மண்ணில் விதைத்த
மாணவி 🙏🏽 pic.twitter.com/xoHZ6EkuN2
ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் உயிரை இழந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்😭
இந்த இழப்பு குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கும்.. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்தத் துயரத்தைத்… pic.twitter.com/6I4MMbbCsH
உண்மை என்ன?
போலீஸாரின் தடியடி தாக்குதலால் போராட்டக்களத்தில் இளம்பெண் இறந்தது குறித்த செய்திகளைத் தேடினோம், ஆனால் அவ்வாறு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற அன்றைய தினத்திலும் அதற்கு அடுத்த நாட்களிலும் போலீஸ் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
அதேவேளையில் ‘The Wire’ செய்தித்தளத்தின் யூட்யூப் பக்கத்தில் ஜூலை 20ஆம் தேதி வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. அதில் ‘போராட்டத்தின் போது டெல்லி போலீஸார் தலையில் தாக்கியதால் இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கிருந்த மாணவர்கள் தாக்குதலுக்குள்ளான அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவையும் காணமுடிகிறது.

மேலும், ‘The Print’ செய்தித்தளத்தில் ஜூலை 22ஆம் தேதி வெளியாகியுள்ள ஒரு செய்தியில், ‘21 வயதான ஷாக்சி என்ற மாணவி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது போலீஸ் தாக்குதலால் காயமடைந்து ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில் உடல்நலம் தேறி தற்போது சுவாசக் கருவி அகற்றப்பட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘அவரது மூளை முதுகெலும்பு ஆகியவற்றை MRI Scan எடுத்துப் பார்த்ததில் அவை இயல்பாகவே இருப்பதாகவும், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும்’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை ‘Hindustan Times’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, போராட்டத்தில் களத்தில் மயக்கமடைந்த மாணவி இறக்கவில்லை என்பதும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வருகிறார் என்பதும் தெரியவருகிறது. மேலும், அந்த மாணவியின் புகைப்படம் எந்த பத்திரிகையிலும் வெளியாகாத நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தைக் கொண்டு அவர் இறந்துவிட்டதாக பரப்புகிறார்கள் என்பது தெரியவருகிறது.
முடிவு:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிறார்கள்.