யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
அசாமில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலர் உயிரிழந்துள்ளனர்.

விரிவான விளக்கம்
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அம்மாநிலத்தின் 21 வருவாய் கோட்டங்களில் உள்ள 622 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 80-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 9 லட்சம் நிவாரணத் தொகை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கடுமையான வெள்ளத்தில் கரையோரங்களில் உள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோக் காட்சியை பதிவிட்டு, இந்த வீடியோ தற்போது அசாம் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Assam continues to strengthen flood relief and rehabilitation efforts as authorities work to support affected families and restore normalcy in impacted areas.#Assam #AssamFloods #FloodRelief #IndiaNews #DisasterRelief #NDRF #ReliefOperations #RescueOperations #EmergencyResponse pic.twitter.com/27PSOnJuB0

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘ABP Live’ செய்தித்தளத்தில் இந்த வீடியோவுடன் இருக்கும் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ’ஜம்மூ காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வா என்னும் பகுதியில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், அப்பகுதியில் ஆற்றின் கரையில் கட்டப்பட்டிருந்த வணிக வாளகம் முழுவதையும் வெள்ளம் அடித்துச் சென்றதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ‘Greater Kashmir’ என்ற யூட்யூப் தளத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ’ஜம்மூ காஷ்மீரின் பீர்வா பகுதியில் வணிக வளாகம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக வெளியிட்டுள்ளது.