யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்பூர்வமற்ற செய்தியை வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500! ஆக.15-ல் விஜய் மாஸ் அறிவிப்பு! வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; வங்கியின் நெட் பேங்கிங்கில் e-KYC விவரங்களை புதுப்பித்திருக்க வேண்டும். இந்த 2 விஷயங்களை செய்தால்தான் பணம்.

விரிவான விளக்கம்
தவெகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மகளிர் உதவித்தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்படுவது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ’One India தமிழ்’ செய்தித்தளம், ’மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 ரூபாயாக உயர்த்தப்படுவது குறித்த அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 15 தேதி முதல்வர் விஜய் வெளியிடயிருக்கிறார்; வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், வங்கியின் நெட் பேங்கிங்கில் e-KYC விவரங்களை புதுப்பித்திருக்க வேண்டும். இந்த 2 நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு 2500 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் ’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500! ஆக.15-ல் விஜய் மாஸ் அறிவிப்பு! "இந்த" 2 விஷயங்களை செய்தால்தான் பணம்!
More Details: https://t.co/cz0LSJUDtq#CMVijay #MagalirUrimaiThogai #NewsUpdate #Oneindia #OneindiaTamil pic.twitter.com/Uo1vDkhYjt
உண்மை என்ன?
மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்படுவது குறித்து வெளியான செய்திகளை தேடினோம். ஆனால் தமிழ்நாடு அரசு அல்லது தவெக கட்சி இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் இது குறித்து அறிவிக்கவுள்ளார் என்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மாறாக, மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்கப்பட்ட போது, ‘முந்தைய திமுக அரசு ரூ.1,000 தொகையை உடனடியாக வழங்காமல் இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தான் வழங்கியது. எங்களை மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள்’ என்று அவர் பதிலளித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, ‘மாதந்தோறும் மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த அமைச்சர்கள் கூட இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்பூர்வமற்ற செய்தியை வெளியிட்டுள்ளது.