
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தூலே (Dhule) மக்களவைத் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மறுவாக்கு எண்ணிக்கையின் போது 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
*மகாராஷ்டிர தூலே மாலோகன் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தாக அறிவித்த நிலையில் மறு எண்ணிக்கையில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது*
*5000 குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஜெயித்த (?) 200 தொகுதிகளில் மறு எண்ணிக்கை செய்த pic.twitter.com/9Dd0wQsjO1
— சையது (@AnasSI13018724) June 5, 2024
மகாராஷ்டிர தூலே மாலோகன் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தாக அறிவித்த நிலையில் *மறு எண்ணிக்கையில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் *காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது...*
5000 குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஜெயித்த(?) 200 தொகுதிகளில் மறு எண்ணிக்கை செய்தால்
— சிந்தனை (@mdunis59) June 5, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் மகாராஷ்டிராவின் தூலே தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளரான பச்சாவ் ஷோபா தினேஷ் (BACHHAV SHOBHA DINESH) 5,83,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் ஒருவர் 5,80,035 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 3831 வாக்குகளே. ஆனால் பரவி வரும் செய்திகளில் காங்கிரஸ் வேட்பாளர் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல்.

மேலும் தூலே தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், தூலே தொகுதியின் வெற்றி நிலவரங்கள் குறித்து நியூஸ்18, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் எதிலும் தூலே தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறித்து செய்திகள் வெளியிடப்படவில்லை.

இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்ட கோளாறு காரணமாக தூலே மக்களவைத் தொகுதிக்கான முடிவுகள் அறிவிப்பதில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் தூலே மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை.
மேலும் படிக்க: பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!
மேலும் படிக்க: மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால் சந்திரபாபுவிற்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் எனப் பரவும் தவறான தகவல்!
முடிவு:
நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தூலே மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகவும், காங்கிரஸ் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. காங்கிரஸ் அங்கு 3831 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.