யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் நிதிநிலை தரவுகளை திரித்து, தமிழ்நாடு கடனில் மூழ்கிவருவதாக தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணித் தலைவர் S.G.சூரியா தவறாக பரப்பிவருகிறார்
பரவிய செய்தி
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த 2021-ல் தமிழகத்தின் கடன் ₹5.77 லட்சம் கோடி. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் படி, அது ₹10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தி.மு.க முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ஐந்தே ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடனை ஏற்றிக்கொண்டு, தமிழகம் இன்றும் ₹48,696 கோடி வருவாய் பற்றாக்குறையில் (Revenue Deficit) தத்தளிக்கிறது. ஆனால், பா.ஜ.க முதலமைச்சர் திரு.@myogiadityanath ஆட்சி செய்யும் உத்திரப் பிரதேசம் ₹64,457 கோடி வருவாய் உபரியில் (Revenue Surplus) தலைநிமிர்ந்து நிற்கிறது!
நிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் தமிழகம் கடனில் மூழ்குகிறது! இதுவா விடியல்?
#DMKFails #YogiAdithyanath #TNBudget2026 #MKStalin #YogiAdithyanath
விரிவான விளக்கம்
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டின் கடன் வேகமாக உயர்ந்து வருவதாக அரசியல் மற்றும் சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் போன்ற திட்டங்களுக்காக கடன் வாங்கி செலவு செய்வதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்ட நிலையில் இது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணித் தலைவர் S.G.சூரியா, ’திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ரூ.5.77 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன் இந்த இடைக்கால பட்ஜெட்டின் போது ரூ.10.71 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு ரூ.48,696 கோடி வருவாய் பற்றாக்குறையில் இருக்கிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் ரூ.64,457 கோடி வருவாய் உபரி வைத்துள்ளது. தமிழ்நாடு கடனில் மூழ்குகிறது, உத்தரபிரதேச சிறப்பாக செயல்படுகிறது’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
#DravidianModel Reality Check: Drowning in Debt! 📉
Under CM Stalin's watch, Tamil Nadu's financial health has collapsed:
🔴 Debt in 2021: ₹5.77 Lakh Crore
🔴 Debt in 2027: ₹10.71 Lakh Crore
In just 5 years, this government has heaped a massive ₹5 Lakh Crore burden on the… pic.twitter.com/7WAQgfUTl4
உண்மை என்ன?
தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகள் பற்றிய தரவுகளை தேடியபோது, ‘PRS India’ என்ற தளத்தில் 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் பற்றிய பகுப்பாய்வு விவரங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ. 3,32,325 கோடியாக இருக்கிறது. இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 2,20,895 கோடியாகும், மொத்த வருவாயில் இது 66.5 சதவீதமாகும். அடுத்ததாக, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதியில் வரி பகிர்வாக ரூ. 58,022 கோடி கிடைத்திருக்கிறது. மேலும் மானியமாக ரூ. 23,834 கோடி கிடைத்திருக்கிறது. இவ்வாறு வரிப் பகிர்வாகவும் மானியமாகவும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்த பங்கு மொத்த வருவாயில் 24.6 சதவீதம் மட்டுமே.

அதேபோல், உத்திரப் பிரதேசத்தின் மொத்த வருவாய் ரூ.6,65,933 கோடியாகும். இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,95,000 கோடியாகும். இது மொத்த வருவாயில் 44.3 சதவீதம் மட்டுமே ஆகும். உத்தர பிரதேசத்தின் மாநில வருவாய் தமிழ்நாட்டை விட 74 ஆயிரம் கோடி மட்டுமே அதிகமாக உள்ளது. உத்திரப் பிரதேசத்துக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் வரிப் பகிர்வு ரூ.2,55,172 கோடியாக இருக்கிறது. மேலும், மானியம் ரூ. 87,915 கோடி அளிக்கிறது. இவ்வாறு ஒன்றிய அரசு கொடுத்த பங்கு மொத்த வருவாயில் 51.5 சதவீதமாகும்.
இவ்வாறு உத்திரப் பிரதேச மாநிலத்தின் பட்ஜெட்டில் 50% க்கு மேல் ஒன்றிய அரசின் நிதியே இடம்பெறுகிறது. இவ்வளவு நிதி பெற்றும் 2026-27-ல் உத்திரப் பிரதேச மாநிலத்தின் கடன் ரூ. 9 லட்சம் கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு அரசு வாங்கும் கடனை அதன் தொகையை மட்டும் கணக்கில் கொண்டு பகுப்பாய்வு செய்யமுடியாது. ஒரு மாநிலம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு சதவீதம் கடன் வாங்குகிறது என்பதைக் கொண்டு தான் தீர்மானிக்க முடியும். உத்திரப் பிரதேச மாநிலத்தின் கடனுக்கும் மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் (GSDP) இடையிலான விகதம் (Debt to GSDP Ratio) 31.8ஆக உள்ளது. அதே தமிழ்நாட்டிற்கு 30.3ஆக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ஒன்றிய அரசிடமிருந்து மானியமாகவும் வரிப் பகிர்வாகவும் தமிழ்நாட்டை விட மிக அதிகமாக உத்தர பிரதேச மாநிலம் பெற்றுவருகிறது என்பதையும் இருந்தாலும் அதன் கடன் அளவு தமிழ்நாட்டின் அளவிற்கு சற்று மட்டுமே குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.
முடிவு:
உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் நிதிநிலை தரவுகளை திரித்து, தமிழ்நாடு கடனில் மூழ்கிவருவதாக தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணித் தலைவர் S.G.சூரியா தவறாக பரப்பிவருகிறார்.