யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பொடாட் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
தேர்தலுக்குப் பிறகு பீகாரில் நடக்கும் மகா யுத்தம்
எந்தச் செய்தி நிறுவனமும் வெளியிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கானுங்களா..... ?

விரிவான விளக்கம்
பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகள் இரண்டு கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, நவம்பர் 14ஆம் தேதி வெளியான தேர்தல் முடுவுகளின் படி, பாஜக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து போலீஸ் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ’பீகாரில் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களில் பீகார் மக்கள் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தி வருவதாக’ திமுக ஆதரவாளரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
முதலில், இந்த வீடியோவில் இருக்கும் போலீஸ் வாகனத்தின் பதிவு எண்ணில் ‘GJ’ என்று இருப்பதைப் பார்க்கிறோம். இது குஜராத் மாநிலத்தின் வாகனப் பதிவு எண் ஆகும்.
மேலும் பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Vadodara Sanskari Nagari’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ‘குஜராத் மாநிலத்தின் பொடாட் மாவட்டத்தில் உள்ள ஹடாத் என்ற கிராமத்தில், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கூட்டம் நடத்தப்பட்ட போது, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் கூட்டத்தினர் போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசியதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இணையத்தில் தேடியபோது, ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அக்டோபர் 12, 2025 அன்று வெளியிடப்பட்டிருந்த இந்த செய்தியில், ‘ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக கூட்டப்பட்ட ’கிஷான் மகாபஞ்சாயத்’ கூட்டத்திற்கு உள்ளூர் நிர்வாகம் அனுமதி தரவில்லை என்பதால் அதை போலீஸார் கலைக்கச் சென்றபோது விவசாயிகளுக்கு போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து இந்த வீடியோ கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பொடாட் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பீகாரில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதாக தவறாக பரப்புகிறார்கள்.