யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ, 2026 ஜனவரியில் பிஸ்வ இஜ்தமா மாநாட்டில் கலந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.
பரவிய செய்தி
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற உடன், சட்ட விரோதமாக குடியேறிய பங்களாதேஷிகள் அங்கிருந்து வெளியேறும் காட்சிகள்.

விரிவான விளக்கம்
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற உடன், சட்ட விரோதமாக குடியேறிய பங்களாதேஷிகள் அங்கிருந்து வெளியேறும் காட்சிகள். pic.twitter.com/xCawuJ2uKG
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது youtuberdip என்ற instagram பக்கத்தில் ஜனவரி 05, 2026 அன்று பரவி வரும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் Bishwa Ijtema 2026 Insane Crowd என்று குறிப்பிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து Bishwa Ijtema குறித்து தேடினோம். அப்போது Zee News ஊடகத்தில் ஜனவரி 03, 2026 அன்று “Bishwa Ijtema 2026: Bishwa Ijtema talks about brotherhood-patience-tolerance, Firhad said after coming to Puinan, Hooghly” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஹூக்ளியில் உள்ள புய்னானில் உலக இஜ்திமா தொடங்கியுள்ளது. மத சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி மற்றும் இஸ்லாமிய அமைதி ஆகிய செய்திகளை சமூகத்திற்கு வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்துள்ளனர் என்று குறிப்பிடபட்டிருந்தது.

அதே போல் The Statesman ஊடகத்தில் இது குறித்து ஜனவரி 03, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் உலகின் மிகப்பெரிய அமைதியான இஸ்லாமியக் கூட்டங்களில் ஒன்றான பிஸ்வா இஜ்திமா, மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 5 முதல் 10 மில்லியன் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ, 2026 ஜனவரியில் பிஸ்வ இஜ்தமா மாநாட்டில் கலந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. மேலும் பரவி வரும் வீடியோ மேற்கு வங்கத்தில் தேர்தல் நடப்பதற்கு ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.